* இ.தே.தொ.கா.பொதுச் செயலாளர் தெரிவிப்பு
13 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற விவாதமோ வேறு எவரினதும் சிபாரிசோ தேவையில்லை என்று இலங்கைத் தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா. தங்கவேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
அனைத்துக் கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடும் நிறைவேற்றப்பட்டது தான் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டமாகும். இதனடிப்படையிலேயே 1988 ஆம் ஆண்டு வட- கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலைத் தொடர்ந்து முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் தனித் தமிழ் மாகாணமாக வட,கிழக்கு மாகாணம் இயங்கியது. மேலும் வட,கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த மூவின மக்களின் பிரதிநிதித்துவத்தையும் இந்த மாகாணம் கொண்டிருந்தது.
இந்த நிலையில் 13 ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் வழங்கியிருந்தால் வரதராஜப் பெருமாளுக்கு வட கிழக்கு மாகாணத்தைத் தன்னிச்சையாக தமிழ் ஈழமாகப் பிரகடனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இவ்வாறானதொரு நிலைமையேற்படுவதற்கு அன்றைய ஜனாதிபதியும் அரசாங்கமும் விட்ட பெரிய தவறே காரணமாகும். மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரம் அன்று வழங்கப்பட்டிருந்தால் இன்று இந்த மனித அவலங்கள் ஏற்பட்டிருக்காது.
இவ்வாறானதொரு நிலைமையில் 13 ஆவது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்காக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் 64 தடவைகளுக்கும் மேல் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டங்களால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது பெரும்பான்மை மக்களைத் திருப்திப்படுத்தி சிறுபான்மை மக்களை ஏமாற்றும் கைங்கரியமாகும்.
இந்த நிலையில் கிழக்கில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தியதன் மூலம் ஜனநாயகத்தை உயிர்ப்பித்துவிட்டோம் என்று அரசாங்க தரப்புமார் தட்டுவதானது நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாகும். இவ்வாறான விஷப்பரீட்சைகள் மேலும் பிரச்சினைகளையே பெருக்கும்.
1981 ஆம் ஆண்டளவில் முன்னாள் அமைச்சர்களான சிறில்மெத்யூ, காமினி திசாநாயக்க போன்றோர் குடாநாட்டிலே உள்ளூராட்சி தேர்தலை நடத்தியபோதும் அதற்கு எதிராக அரசாங்கத்திலிருந்துகொண்டே அமரர் தொண்டமான் காட்டிய எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்டமையே குடாநாடு தீயில் எரிவதற்குக் காரணமாக அமைந்தது.
இவ்வாறானதொரு வரலாற்று தவறே தற்போது கிழக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை தூக்கிப்பிடிப்பதையும் கிழக்கிலங்கையிலே ஜனநாயகத்தைக் கொண்டு வந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதைவிட்டு விட்டு விட்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண அரசாங்கம் முன்வரவேண்டும்.