தமிழ்- சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு இடம்பெறும் விசேட பொது வைபவங்களிலும் மற்றும் மலிவு விற்பனை, வியாபாரம் மேம்படுத்தல் நடவடிக்கைகளிலும் ஒலிபெருக்கிச் சாதனைங்களைப் பயன்படுத்துவதற்கு பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு தனிநபரும் இத்தகைய ஒலிபெருக்கி பாவனையால் பாதிக்கப்படாதவாறு அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் பொலிஸ் நிலையங்களினூடாக அறிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தில் அதிர்ஷ்டலாபச் சீட்டு விற்பனையாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சைக்கிளோட்டப் போட்டிகள் மற்றும் நடமாடும் வாகன விற்பனைகள், புதுவருடக் கொண்டாட்டங்களில் இரவு, பகலாக நாள் முழுவதும் ஒலிபெருக்கி பயன்படுத்துவது வழமை. எனினும், பொலிஸ் அனுமதி பெற்று யாரையும் பாதிக்காத விதத்தில் உரிய ஒலி அளவில் இவற்றையும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.
தற்போது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை ஒலிபெருக்கி பாவனைக் கட்டுப்பாடு உள்ளதை சுட்டிக்காட்டி வரையறுக்கப்பட்ட சூழல் திட்டமிடல் அமைப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததை அடுத்தே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த அமைப்பின் சார்பில் கருத்துத் தெரிவித்த உதித்த எஹலஹேவ; பகல் நேரங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அளவில் விளம்பர நடவடிக்கைகளுக்காகவும் விற்பனைப் பிரசாரம் போன்றவற்றுக்குமாக ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது குற்றமாகும்.
எனவே, பொலிஸார் மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்கமைய இவற்றைப் பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை சகல பொலிஸ் நிலையங்களிலும் உரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் பெற்றுக்கொள்ளலாம்.
புதுவருடக் கொண்டாட்டங்களில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் அளிக்காத வகையில் பெரிய மைதானங்களில் நடத்தப்படுமாயின் இதற்கான அனுமதியை பொலிஸார் எந்தவித ஆட்சேபனையுமின்றி உடனடியாகவே வழங்குவர்.
அண்மையில் குடியிருப்பாளர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து பொல்கொட, மொறட்டுவ ஆகிய இடங்களிலுள்ள இரு ஹோட்டல்களில் பகல்வேளையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தியமைக்காக ஒரு இலட்சம் ரூபாவை தண்டமாக பொலிஸார் அறவிட்டதுடன், ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.