* அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
2008 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின்படி 50 ஏக்கர் காணிக்கு குறைவாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எதிர்வரும் மே மாதம் முதல் ஒரு மூடை உரத்தை 1500 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அபிவிருத்தி கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா கிறேன்ட் ஹோட்டலில் நடைபெற்ற இருநாள் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
"நுவரெலியா - பதுளை மாவட்டங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி
வகைகள் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதைவிட உள்ளூரில் தரமான விதை உருளைக் கிழங்கு உற்பத்தி செய்தல் சம்பந்தமாக தேவையான ஆலோசனைகளையும் சரியான வழிமுறைகளையும் ஒரு அறிக்கையாக விவசாய சங்க பிரதிகள் தயாரித்து இன்னும் 2 மாத காலத்திற்குள் எனக்கு வழங்க வேண்டும்.
தற்பொழுது இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஆனால், எமது நாட்டிற்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. இதனாலேயே உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக் கிழங்கை தடை செய்ய வேண்டுமானால் உள்ளூரில் உருளைக்கிழங்கின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கு தீர்வு வரியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை தடை செய்யலாம். ஆனால், இங்கு உற்பத்தி செய்யப்படும் உருளைக்
கிழங்கை களஞ்சியசாலைகளில் மறைத்து வைக்கக்கூடாது, பாவனையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
கடந்த வருடம் மாத்தளை மாவட்டத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நன்மைகருதி வெங்காயம் இறக்குமதி செய்வதை தடை செய்தோம்" என்றார்.