-எம்.ஏ.எம். நிலாம்-
அரசாங்கம், உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெய் போன்றவற்றின் வரியை 5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதன்படி இவ்விரு எண்ணெய்களினதும் லீற்றர் ஒன்றுக்கு 40 ரூபாவால் குறைந்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவையடுத்து நிதித், திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதுவரை 28 சதவீதமாக இருந்த தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெயின் வரியை அரசு 5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த வரிக் குறைப்பு அமுலில் இருக்குமென நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சின் அறிவிப்பின்படி சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து எண்ணெய் வகைகளதும் வரி 5 சதவீதமாக இருக்குமெனவும் தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்ட காலத்தில் சமையல் எண்ணெய்களின் விலைகளை குறைக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த வரிக் குறைப்பு, மறு அறிவித்தல் வரை அமுலிலிருக்குமென நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.