* மங்கள சமரவீர தெரிவிப்பு
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலிருந்து அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகின்றது என ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அநுராதபுரம் சுகதாராமய மண்டபத்தில் நடைபெற்ற `கட்சியைக் காப்பாற்றி நாட்டைக் கட்டியெழுப்புவது எவ்வாறு?' எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மங்கள சமரவீர தொடர்ந்து உரையாற்றுகையில்; "ராஜபக்ஷ கம்பனியாரின் தவறுகளைச் சுட்டிக்காட்டியதனாலேயே நானும் ஷ்ரீபதியும் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டோம். அதன்பின் அரசைவிட்டு நாம் விலகினோம்.
ஆனால், சுதந்திரக்கட்சியை விட்டு நாம் அகலவில்லை. வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆட்சியமைக்கும். அதற்கான அடித்தளமே தேசிய சபையாகும்.
நாடு முழுவதிலும் நூறு கருத்தரங்குகள் வரையில் நடத்தத் தீர்மானித்துள்ளோம். நானும் சேர்ந்து ஜனாதிபதியாகிய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எதற்கெடுத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஏற்றத்தையும் யுத்தத்தையுமே அரசு காரணம் காட்டுகின்றது. பாணின் விலை முன்னூறு வீதத்தால் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பொருட்களின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்நிலை ஏற்படக் காரணம் யுத்தமோ மசகு எண்ணெய் விலை ஏற்றமோ இல்லை. அரசாங்கத்தின் அமைச்சர்மாரினதும் ராஜபக்ஷ கம்பனியாரினதும் ஊழல் மோசடிகளே பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாகும். அமைச்சர் ஒருவர் தனது மனைவியின் பிறந்த தினத்துக்கு பலகோடி ரூபா பெறுமதியான இன்டர் கூலர் வாகனமொன்றை பரிசாக வழங்கியுள்ளார். பிரபல படைத்தளபதி ஒருவர் தன் மனைவிக்கு 4 கோடி ரூபா பெறுதியான பென்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இவ்வாறு பல ஊழல்கள் நடைபெற்று வரும் இவ்வரசாங்கத்தின் முறைகேடுகள் பலவற்றையும் வெகு விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம்.
உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவு அமைச்சர்மார் தற்போது எமது நாட்டில் உள்ளனர். உலக வல்லரசான அமெரிக்காவில் கூட 17 அமைச்சர்களே உள்ளனர். 75 கோடி மக்கள் வாழ்கின்ற அந்நாட்டில் 17 பேர் அமைச்சர்கள். 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எமது நாட்டில் 110க்கும் மேல் அமைச்சர்கள் உள்ளனர். இந்தியாவில் நூறு கோடி மக்கள் உள்ள போதும் 21 அமைச்சர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
110 அமைச்சர்களின் மாதாந்த செலவினமே பல கோடி ரூபாக்களாகும். பொருட்களின் விலையை அதிகரிக்காமல் அமைச்சரவையை பராமரிக்க பணம் தேடுவது எவ்வாறு?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது சம்பிக்க ரணவக்க, ஹெல உறுமய தேரர்கள் மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களின் ஆலோசனைகளையே கேட்டுச் செயற்படுகின்றார். தற்போது சுதந்திரக் கட்சி வரலாற்றில் செய்ய நினைக்காத ஒன்றையும் செய்கின்றார். பிள்ளையானின் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றார். ஆயுதங்கள் களையப்படாத பயங்கரவாதக் குழுவொன்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதே அரசின் வங்குரோத்துத் தன்மையை வெளிப்படுத்துகிறது. எனவே, மோசடி நிறைந்த இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப இன்றிலிருந்தே முயற்சிக்க வேண்டும்" என்றார்.
இவ்வைபவத்தில் சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் செயலாளரும் தேசிய அமைப்பாளருமான டிரான் அலஸ், மகளிர் பிரிவுச் செயலாளர் நிலூகா ஏக்க நாயக்க, விகாராதிபதி வண. அஸ்வத்தே சுமனசிறி தேரர் உட்பட உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பங்குபற்றினர்.