* அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
-எம்.ஏ.எம்.நிலாம்-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்த அரசாங்கம் உறுதிபூண்டிருந்தால் பிள்ளையான் குழு உட்பட, சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருப்போரை உடனடியாக நிராயுதபாணிகளாக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கின்றார்.
வேட்பாளர் குழுவொன்றுக்கு மட்டும் ஆயுதங்களைப் பயன்படுத்த இடமளித்திருப்பதனூடாக கிழக்கில் பெரும் அச்சுறுத்தலை அரசு தோற்று வித்திருப்பதாகவும் ரணில் விக்கிரம சிங்க விசனம் தெரிவித்திருக்கின்றார்.
கிழக்குமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை விஷேட அறிக்கையொன்றை விடுத்திருக்கின்றார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களினூடாக தோற்று விக்கப்பட்டுள்ள அரசியல் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் சகோதரர்களாக வாழும் சூழலை ஏற்படுத்துவதற்குமான நோக்கத்துடனேயே ஐக்கிய தேசியக் கட்சி ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத்தீர்மானித்தது.
சவால் மிக்க இந்த நோக்கத்தை அடைவதற்காக நேர்மையுடனும் பெருந்தியாகத்துடனும் ஜனநாயகத்தையும், மக்களின் இறைமையையும் பாதுகாப்பதற்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் ஹஸன் அலி ஆகியோர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத்துறந்து களத்தில் இறங்கியுள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் எடுத்த முடிவை நாம் பாராட்டுகின்றோம்.
அமைச்சுப் பதவிகளுக்கும் வரப்பிரசாதங்களுக்குமாக தமக்கு வாக்களித்த மக்களையும், கட்சியை காட்டிக் கொடுக்கும் பலருக்கு மத்தியில் பதவிகளையே தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகத்தை காக்கவும், மக்களுக்காகவும் களமிறங்கியிருக்கும் இவர்கள் நிச்சயமாக மக்களின் பேராதரவைப்பெற்றுக் கொள்வர் என்பது உறுதியானதாகும்.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களதும் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர்களும் இவர்களுடன் இணைந்து போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பில் ஏ.சசிதரனும், திருகோணமலையில் சின்ன மஹ்ரூபும், அம்பாறையில் தயாகமகேயும் போட்டியிடுகின்றனர். எமது வேட்பாளர் குழுவானது சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை அர்த்த புஷ்ட்டியுள்ளதாக கொண்டுள்ளது.
அத்துடன் கட்சியின் கிழக்கு மாகாண சிரேஷ்ட அமைப்பாளர்களும், முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்களும் கைகோர்த்துள்ளனர். சுனில் சாந்தரணவீர, சந்திரதாஸகலப்பத்தி, எம்.ஏ.அப்துல் மஜீத், எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் சரத்லோரன்ஸ், ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலொன்றை நடத்துவதற்கு ஆரோக்கியமில்லாத சூழ்நிலையில் கூட பெரும் சவாலை எதிர்கொள்ள இவர்கள் தயாராகி விட்டனர். ஜனநாயகத்தையும், தேசிய ஐக்கியத்தையும், மக்களின் இறைமையையும் பாதுகாப்பதற்காக எமது வேட்பாளர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
உயிராபத்தை எதிர் கொள்ளக் கூடிய நிலைமையில் கூட தேர்தலில் போட்டியிட முன்வந்த தமிழ் வேட்பாளர்களை பாராட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமானால் பிள்ளையான் குழுவான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உடனடியாக நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய கடப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது.
கிழக்கை மீட்டதாக பம்மாத்துக்காட்டும் அரசாங்கம் குறைந்த பட்சம் வேட்பாளர்களுக்காவது பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வரவேண்டும். ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு சட்ட விரோத ஆயுத பாவனைக்கு வழிவிட்டு ஏனையவர்களுக்கு பாதுகாப்பளிப்பதை நிராகரித்துவரும் அரசாங்கம் அடுத்து வரும் நாட்களில் கிழக்கில் எத்தகைய நிலைமையை தோற்றுவிக்கப்போகின்றது என அச்சச்சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பு தொடர்பில் அரசு பின்பற்றும் கடும் போக்கும், அணுகு முறையும் விசனம் தரக்கூடியதாக உள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். கொலை அச்சுறுத்தல் காணப்படும் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள சட்டமா அதிபரூடாக நீதிமன்ற அனுமதியைக்கோரும் அரசின் கோரிக்கையானது நீதியற்ற தொன்றாகும்.
இத்தேர்தலில் போட்டியிடாத எந்தப் பதவிகளிலுமில்லாத சில கட்சித் தலைவர்களுக்கு 30,40 பேர் கொண்ட பாதுகாப்பை வழங்கியிருக்கும் அரசாங்கம் ஹக்கீமின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முயற்சிப்பது அரசியல் விரோத நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகள் ஜனநாயக விரோதமானவையாகும். ஜனநாயக சமூகம் இதனை ஒருபோதும் அனுமதிக்காது. இத்தகைய மிலேச்சத்தனமான போக்கினை அரசு பின்பற்றுவதை புத்திஜீவிகள்சமூகம் கடுமையாக எதிர்க்கின்றது.
இத்தகைய நிலைமைகளை கவனத்தில் கொண்டு சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை உறுதிசெய்யும் பொருட்டு உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கூடுதலாக ஈடுபடுவதற்கு அரசு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.