நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தித்துறை அமைச்சரும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனாதிகாரியுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலையானது பயங்கரவாதிகளின் மிலேச்சத்தமான நடவடிக்கையென கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மக்களை அமைதி காத்து பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலைச் சம்பவத்தையிட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வின்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டுள்ளார். இது புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு குரூரத்தனமான நடவடிக்கையாகும்.
இச்சம்பவத்தில் ஜெயராஜுடன் பலியானோர், காயமடைந்தோர் தொடர்பாக கவலையடைந்துள்ளேன்.அமைச்சர் ஜெயராஜ் இன, மத பேதமின்றி சேவையாற்றிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த தலைவராகும். கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு வாக்குகளைப் பெற்று மக்களுக்கு சேவை செய்தவர் ஆவார். தமது சட்டத்தரணியென்ற தொழிலுக்கு அப்பால் மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றியவர். இந்த படுகொலைச் சம்பவத்தின் மூலம் ஜனநாயகத் தலைவர்களைக் கொலை செய்யும் மிலேச்சத்தனத்தை மீண்டுமொரு முறை புலிகள் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது. இதற்கு சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொறுமை காத்து சமாதானத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலை நாட்ட சகலரும் ஆதரவழிக்க வேண்டும்.