ஐ.பி.எல். சார்பில் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நீக்காவிட்டால், இத்தொடரை புறக்கணிக்கும்படி பத்திரிகையாளர்களுக்கு கபில்தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) தொடங்கப்பட்டது. இதற்கு சவாலாக இந்திய கிரிக்கெட் சபை சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். ்ருவென்ரி - 20ீ தொடர் வரும் 18 ஆம் திகதி தொடங்குகிறது. 44 நாட்களில் மொத்தம் 59 போட்டிகள் நடக்கவுள்ளன.
இத்தொடர் பற்றிய செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. `இன்ர நெற்' நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவிர, பத்திரிகைகள் சார்பில் எடுக்கப்படும் புகைப்படங்களை `இன்ரநெற்ரில்' வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட பத்திரிகையில் மட்டுமே புகைப்படம் வெளிவர வேண்டும். இதன் துணை நிறுவனங்களில் வெளியிடக்கூடாது.
படங்களுக்கான உரிமை ஐ.பி.எல். வசம் தான் இருக்கும். இப்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பத்திரிகைகளுக்கும் `இன்ர நெற்' பிரிவு உண்டு. அப்படியிருக்கையில் `இன்ர நெற்ரில்' படங்களை வெளியிடத் தடை விதித்திருப்பதற்கு `இந்திய விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம்' கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கிரிக்கெட் சபைத் தலைவர் சரத் பவாரை கேட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், இத்தொடரை புறக்கணிக்கவும் முன்னணி செய்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்தச் சூழலில் அரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் பேட்டியளித்த ஜாம்பவான் கபில் தேவ், ஐ.பி.எல். அமைப்பின் கட்டுப்பாடுகளை கடுமையாக சாடினார். இது குறித்து இவர் கூறியதாவது;
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தேவையில்லாதது. பத்திரிகையாளர்களை வேண்டாம் என்று ஐ.பி.எல். கருதினால், இத்தொடரின் செய்திகளை சேகரிக்காமல் விட்டுவிடலாம். கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால், இத்தொடரை தாராளமாக புறக்கணிப்பு செய்யலாம்.
இந்திய கிரிக்கெட் சபை தனது வசதிக்கேற்ப விதிமுறைகளை மாற்றுகிறது. டெஸ்ட் தொடர் நடக்கும் போதே பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல். அணிகளின் அறிமுக விழாக்களில் பங்கேற்கின்றனர். இது எவ்விதத்தில் நியாயம்?
ஐ.சி.எல். அமைப்பை தொடக்கிய போது இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த கட்டமாக திறமைகளை தேடி சிறிய நகரங்களுக்கு செல்ல இருக்கிறோம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதே எங்களது இலக்கு. ஐ.சி.எல். அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு உலகம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.
நாங்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து பல வீரர்கள் இங்கு வந்து விளையாடுகிறார்கள். இது இரு நாட்டு உறவை மேம்படச் செய்யும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சர்வாதிகாரி போல் மற்ற அமைப்பினர் செயல்படக்கூடாது.
இந்திய வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக ஐ.சி.எல். நிர்வாகிகளில் ஒருவரான கிரண் மோரே குற்றஞ்சாட்டினார். இவர் கூறுகையில்;
"ஆமதாபாத்தில் இந்திய அணி மிக மோசமாக ஆடியது. இதற்கு வீரர்களின் கவனம் ஐ.பி.எல். பக்கம் திரும்பியதே முக்கிய காரணம். அணிகளின் அறிமுக விழாவில் பங்கேற்று களைத்துப் போய்விட்டார்கள். பெரும்பாலான வீரர்கள் பயிற்சிக்கே வரவில்லை," என்றார்.