-கா.பார்த்தீபன்-
ஈழவள நாட்டில் யாழ். குடாவின் வலிகாமம் மேற்குப் பகுதியில் மூளாய் வதிரன்புலோ என்னும் திவ்விய ஷேத்திரத்தில் வானளாவம் உயர்ந்து நிற்கும் இராஜகோபுரம் தன்னிகரில்லாத் தலைவனாகிய சித்தி விநாயகர் எழுந்தருளி இருக்கும் ஆலயம்.
சிற்பத்திறன் மிக்க சித்திரத்தேர், அழகு பொழியும் திருவீதிகள், சுமையை தாங்கும் சுமை தாங்கி, நன்னீரை வாரி வழங்கும் நீர்த்தாங்கி, சமயகுரவர் புகழ்பாடும் திருமுறை மடம், வழிநெடுந்தூரம் வருவோருக்கு காலாறகண்ணயர ஆலயத்துடன் அமைந்த மடம், ஆலய அயலில் அமைந்த அந்தணர் இல்லம், மக்கள் பசித்துயர் தீர்க்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கட்டிடம், களைத்து வரும் பாதசாரிகளுக்கு நிழல்தருவதற்காக ஆலய இருமருங்கிலும் அமைந்த வானளாவ உயர்ந்து நிற்கும் அரசு, ஆல், வாகை, கொன்றல் மரங்கள், ஆண்டவனை அர்ச்சிக்க பறிக்க பறிக்க அள்ளிச்சொரியும் பூக்கள் நிறைந்திருக்கும் திருநந்தவனம், இவை அனைத்தும் அமைந்த இடம் தான் "மூளாய் வதிரன்புலோ என்னும் புண்ணிய பூமியாகும்".
இவ்வாலயத்தில் அடியார்களின் தனிப்பட்ட பெருநிதி கொண்டு ஆலயத்திலுள்ள மகாமண்டபப் பெரும்தூண்கள் அகற்றப்பட்டு, கர்ப்பக்கிரகத்தில் நடைபெறும் அபிஷேக, ஆராதனை தரிசனத்தை நிறைவுறக் காண வேண்டும் என்னும் பெரு எண்ணம் கொண்டு, சிறிய தூண்கள் மிக நவீனமுறையில் புனரமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஆலய தளம் முழுமையாக வர்ணப்பளிங்கு தளதகடுகளினால் பதிக்கப்பட்டு அடியார்க்கு மிக அமைதியான முறையில் இறைவழிபாடு செய்ய இப்பணி நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
எனவே, எம்பெருமானின் வருடாந்த உற்சவம் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் திருவிழா நடைபெற எம்பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.
சித்திரை புதுவருடப் பிறப்பன்று 13.04.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சப்பறத்திருவிழாவும் 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேர்த் திருவிழாவும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சித்திரா பௌர்ணமியன்று காலை 9 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் மாலை கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெற்று மறுநாள் திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் நடைபெற திருவருள் பாலித்துள்ளார்.
இந்நாளில் நாட்டில் சாந்தியும் சமாதானமும் சகலருக்கும் கிடைக்கப்பெற எம்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.