* நீதிபதிகள் தீர்ப்பு
வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் நீதிபதிகள், கார்ச் சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தினாலேயே டயானா கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸை பிரிந்து வாழ்ந்த அவரது முதல் மனைவி டயானா கடந்த 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கார் விபத்தில் பலியானார். அங்குள்ள ஒரு சுரங்கப்பாதையில் டயானாவும் அவரது காதலர் டோடி பயட்டும் சென்று கொண்டிருந்த காரை புகைப்படக்காரர்கள் துரத்திச் சென்றனர்.
இதனால், வேகமாகச் சென்ற டயானாவின் கார் சுரங்கப் பாதையில் மோதி நொருங்கியதில் அவரும் அவரது காதலரும் பலியானார்கள்.
ஆனால், டயானாவின் இந்த மரணம் குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்தன. பிரிட்டிஷ் சட்டப்படி ஒருவர் இயற்கைக்கு மாறாக மரணமடைந்தால் அதுபற்றி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். எனவே, டயானாவின் மரணம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். 252 சாட்சிகளிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். விபத்துத் தொடர்பான வீடியோக் காட்சிகளையும் நீதிபதிகள் பார்வையிட்டனர். விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து நீதிபதிகள் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளனர். காரை ஓட்டிச் சென்ற சாரதி ஹென்றிபோலின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையாலும் புகைப்படக்காரர்கள் துரத்திச் சென்றதாலுமே விபத்து நடந்ததாகவும் இதனாலேயே டயானா கொல்லப்பட்டதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 11 நீதிபதிகளில் 9 பேர் இந்தத் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். மற்ற இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.