* பாகிஸ்தான் அணு விஞ்ஞானி
நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே அணுவாயு இரகசியங்களைக் கடத்திய குற்றம் முழுவதையும் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதர்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணுவாயுத இரகசியங்களை ஈரான் , வடகொரியா , லிபியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தியதாக கான் மீது 2004 ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றத்தைக் கான் ஒப்புக் கொண்டதால் ஜனாதிபதி முஷாரப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். ஆனாலும், அவர் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அணுவாயுத இரகசியங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியதில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முஷாரப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும் கானை சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் விசாரிப்பதற்கு முஷாரப் அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில், தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அணுவாயுத நாடாக மாற்றியதன் மூலம் பாகிஸ்தானை முதல்முறையாகக் காப்பாற்றினேன். அணுவாயுத இரகசியங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய குற்றத்தை நானே செய்ததாக ஒப்புக் கொண்டபோது இரண்டாவது முறையாக நாட்டைக் காப்பாற்றினேன் என்றார் கான்.
குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் நாட்டுக்குச் சேவை செய்திருக்கிறேன் என முன்னாள் பிரதமர் சுஜாத் ஹுசைனும் செனட் சபை உறுப்பினர் முஷாஹித் ஹுசைனும் கூறியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கானின் கருத்தால் அணுவாயுத இரகசியங்கள் கடத்தப்பட்டதில் அரசுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பட்டுள்ளது.
இதற்கிடையே கானை வீட்டுக்காவலில் இருந்து விடுவிப்பது குறித்து பாகிஸ்தானின் புதிய அரசு ஆலோசித்து வருகிறது.
ஆனால், புதிய அரசுடன் இதுவரை தாம் எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை என கான் கூறியுள்ளார்.
1998 இல் முதலாவது அணுவாயுத சோதனை நடத்தியதன் மூலம் முதலாவது இஸ்லாமிய அணுவாயுத வல்லரசு என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் கான். பாகிஸ்தானின் அணுவாயுத நாயகன் என பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் இன்றும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.