அண்மையில் வெளியான க.பொ.த சா/த பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் 5 ஆவது இடத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் 1 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட திருகோணமலை ஷ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் மாணவிகளைப் பாராட்டும் மற்றும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை பகவான் ஷ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தினால் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை திருகோணமலை சாயீஸ்வரம் மண்டபத்தில் நடத்தப்படும் க.பொ.த. சா/த) பரீட்சையில் விசேட சித்திகளைப் பெற்ற மாணவிகள், கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோரின் எதிர்கால நன்மைக்காக விசேட பிரார்த்தனையும் இந்நிகழ்வில் இடம்பெறும்.
இம்முறை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவிகளில் 12 பேர் 10ஏ, ஒன்பது பேர் 9ஏ, எட்டுபேர் 8ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பாராட்டு, கௌரவிப்பு, பிரார்த்தனை நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.தியாகலிங்கம், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், கிழக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர்.ரஞ்சினி ஆகியோர் பாராட்டுரைகளை நிகழ்த்துவர். தீபம், பஜனையுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் திருமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் ஆதினகர்த்தா `வேதாகமமாமணி' பிரம்மஷ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் ஆசியுரை வழங்குவார். தலைமையுரை ஆ.சிவலிங்கம் (தலைவர், பகவான் ஷ்ரீசத்திய சாயி சேவாநிலையம்) வரவேற்புரை நா.புகேந்திரன் (தலைவர், வடமத்திய பிராந்திய ஷ்ரீ சத்திய சாயி சேவா நிலையங்களின் இணைப்புக்குழு), சிறப்புரை ஷ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம்.