திருகோணமலை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பின் சுகாதார உளவள சமூக அலகின் ஏற்பாட்டில் ஒரு வருட கால உளவளத்துறைப் பயிற்சிநெறியை நிறைவு செய்து கொண்ட 45 உளவளப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சென்.மேரிஸ் பெண்கள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. செடக் எஹெட் கறிற்றாஸ் தேசியப் பணிப்பாளர் வண. பிதா டேமியன் பெர்னாண்டோ பிரதம அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டார்.
திருமலை மாவட்ட எஹெட் கறிற்றாஸ் பணிப்பாளர் வண.பிதா எப்.எக்ஸ். டயஸ் தலைமை வகித்தார். வண.பிதா டயஸ் பேசும்போது; `கடற்கோள் அழிவிற்குப் பின்னர்தான் உளவியல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உளவள சமூக மேம்பாடு பற்றிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து நிறுவனங்களும் முழுமையாகச் சிந்திக்கத் தொடங்கின. ஆனால், எஹெட் கறிற்றாஸ் அமைப்பு, கடற்கோள் ஏற்படுவதற்கு முன்பே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது" என்று கூறினார்.
செடெக் எஹெட் கறிற்றாஸ் தேசியப் பணிப்பாளர் வண.பிதா டேமியன் பெர்னாண்டோ பேசும்போது;
"உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்புடன் உளவியல் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்" என்று கூறினார். செடக் எஹெட் கறிற்றாஸ் அமைப்பின் கடற்கோள் செயற்றிட்ட முகாமையாளர் தேவேந்திரராஜா பேசும்போது; உடைந்து போன பொருட்களை ஏதாவது ஒரு விதத்தில் சரி செய்யலாம். ஆனால், உடைந்து போன உள்ளங்களை கட்டி எழுப்புவது கடினமானதாகும். அதற்கென தனியான பயிற்சி உளநலப் பணியாளர்களுக்குத் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். செடக் எஹெட் கறிற்றாஸ் தேசிய உளவள ஒருங்கிணைப்பாளர் அருட் சகோதரி பாத்திமாநாயகி பேசும்போது; அன்பு மற்றும் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் மனிதாபிமான சேவைக்கு வாழும் உள்ளங்கள் அழியாச் சின்னங்களாக அமைகின்றன என்றார். மாகாண சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் து.தவக்கொடிராஜா, உளவளப் பயிற்சி நெறியை நடத்திய மனநல வைத்திய நிபுணர் டாக்டர் ரி.கடம்பநாதன் ஆகியோரும் பேசினர். திட்ட முகாமையாளர் ஜி.ஏ.பிரான்ஸிஸ் நன்றி கூறினார்.