* ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் பொலிஸ்காரர் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 2006 ஜனவரி இரண்டாம் திகதியன்று இரவே அச்சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்களை அறிய முற்படவில்லையாவென்ற சட்டத்தரணியின் கேள்விக்கு சாட்சியம் வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் இல்லையென்றும் பதிலளித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையடியில் ஐந்து இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியம் வழங்குகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இப்படுகொலை தொடர்பான விசாரணைகள் நிசங்க உடலாகமவைத் தலைவராகக் கொண்ட ஏழுபேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ் ஆணைக்குழு முன்னிலையில் தொடர்ந்து இரண்டாவது தடவையாக சாட்சியம் வழங்கிய அப்பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் தெரிவிக்கையில்;
நான் திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் 2006 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஒரு மாதமும் பத்து நாட்களும் மாத்திரமே கடமையாற்றினேன். அதற்குப் பின்னர் எனது வயதின் முதிர்ச்சி மற்றும் சேவை அடிப்படை எனது சொந்த வசிப்பிடம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குருநாகல் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டேன்.
திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்ற அன்றே சவாஹிரை எனக்குத் தெரியும்.
அச்சமயம் அப்பொலிஸ் நிலையத்தில் நான்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர்களும் இரு அத்தியட்சர்களும் இருந்தனர்.
நான் அந்நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜானக மாலகப்பெரும முன்னிலையிலேயே எனது கடமையை பொறுப்பேற்றேன்.
நான் ஜனவரி இரண்டாம் திகதியன்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் உத்தியோகத்தர்கள் தங்குமிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சமயமே இச்சம்பவம் தொடர்பாக சவாஹிர் மூலம்தான் எனக்குத் தெரியும்.
அத்துடன் சவாஹிர்தான் இச்சம்பவம் தொடர்பில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் அவர்களிடமும் அவர்கள் தம் உறவிர்னர்களிடமும் விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் கூறினார் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இச்சாட்சியை குறுக்குவிசாரணை செய்த சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல், இச்சம்பவம் தொடர்பாக இரவு 7.30 மணிமுதல் 10.30 மணிவரை உங்களுக்குத் தெரியாதா என்றும் குறுக்கு விசாரணை செய்த போது குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது மட்டுமே தனக்குத் தெரியும் எனச் சாட்சி பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து சாட்சி, சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேலின் குறுக்கு விசாரணைகளுக்கு அவர் மேலும் பதிலளிக்கையில்;
நான் இரவு பத்து முப்பது மணியளவில் உத்தியோகத்தர்கள் தங்குமிடத்தில் இருந்தபோதே இதைப் பற்றி சவாஹிர் மூலம் அறிந்தேன்.
ஆனால் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை அறிவதற்கு நான் முற்படவில்லை. அத்துடன் சம்பவ இடத்திற்குச் செல்லும் வாய்ப்பும் எனக்குக்கிடைக்கவில்லையெனத் தெரிவித்தார்.
மேலும் இச்சாட்சி ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர் தேவநேசன் நேசையாவின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளிக்கையில்ல;
இச்சம்பவம் கடற்கரையில் இடம்பெற்றதாகவே நான் அறிந்தேன். ஆரம்பத்தில் சரியாக எவ்விடத்தில் இடம்பெற்றதென எனக்குத் தெரியாது.
காந்தி சிலையடியை அண்மித்த 400 மீற்றர் தூரத்தை கடற்கரை (பீச்) எனக் கூறுவதுண்டு.
அத்துடன் இச்சம்பவத்தில் காயமடைந்த பூங்குழலோகன் மற்றும் கோகுலராஜ் ஆகிய இருவரில் ஜனவரி ஆறாம் திகதி அன்று கோகுலராஜின் வாக்கு மூலத்தை மட்டும்தான் நான் பதிவு செய்தேன். பூங்குழலோகனிடம் வாக்கு மூலம் நான் எடுக்கவில்லை.
அதற்குப் பின்னர் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேறு குழுவிடம் ஒப்படைத்ததாலேயே நான் பூங்குழலோகனிடம் வாக்குமூலம் எடுக்கவில்லையெனத் தெரிவித்தார்.