அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயே கொன்றவரை அடையாளம் காண்பதற்காக தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) ஆராய்ந்து வருகின்றனர்.
இதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக பார்வையாளர்கள், மரதனோட்டப் போட்டியில் பங்குபற்றியோர் உட்பட நேற்று வரை 75 க்கும் மேற்பட்டோரிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வந்தது முதல் குண்டு வெடிக்கும் வரையிலான நிகழ்வுகள் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோ ஒளிப்பதிவு நாடாவைப் பெற்றுள்ள விசாரணைக் குழுவினர் அதனை மிக நுட்பமாக ஆராய்ந்து வருகின்றனர்.
தற்கொலைக் குண்டுதாரி மரதனோட்ட வீரர் போல் வந்தாரா அல்லது மரதனோட்டப் போட்டியை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தொடக்கிய போது பார்வையாளர் போல் அவ்விடத்திற்கு வந்தாரா என்பது குறித்தும் அவருடன் வேறு எவராவது வந்தார்களா என்பது குறித்தும் வீடியோ ஒளிப்பதிவை பயன்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர்.
இதேநேரம், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மீது பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் மிக முக்கியமான ஒரு அமைச்சர் வருகின்ற போதும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையொன்று தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த எவருடைய அடையாள அட்டையும் இது இல்லை என்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர்.
இந்த அடையாள அட்டை வாழைச்சேனையைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி முஹமட் அமீன் என்பவருடையதென கண்டறியப்பட்டுள்ளதால் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வாழைச்சேனை பொலிஸாரது உதவியும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு ஒரு பொலிஸ் குழுவும் சென்றுள்ளது.
மேலும், தற்கொலைக் குண்டுதாரி அந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துகின்றன. இதற்காக பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுதாரி சுமார் 5 கிலோ வெடிமருந்தைக் கொண்டு வந்திருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுவரை இச்சம்பவம் தொடர்பாக பெருமளவானோர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.