பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகமாக தம்மிக கித்துல்கொடவின் நியமனம் அரசியலமைப்பை மீறியதோ அல்லது சட்டரீதியற்றதோ அல்லவென சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டார நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
தம்மிக கித்துல்கொடவின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐ.தே.க. நேற்று சபையில் சிறப்புரிமை மீறல் பிரச்சினை கிளப்பிய போது ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து சபாநாயகர் இதனை அறிவித்தார்.
ஆளும்தரப்புடன் இணைந்து சபாநாயகரும் வலியுறுத்தியமையால் இப்பிரச்சினை பாரிய சர்ச்சையாக வெடித்தது.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் தலைமையில் கூடிய போது அவர் பதில் செயலாளர் நாயகம் நியமனம் குறித்து சபையில் அறிவித்தார். இதன் போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை கிளப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா தெரிவித்ததாவது;
"தம்மிக கித்துல்கொட ஏற்கனவே அரசியலமைப்புச் சபையின் செயலாளராக உள்ளார். இந்நிலையில், அவரை எவ்வாறு பாராளுமன்ற பதில் செயலாளராக நியமிக்க முடியும்? மாயதுன்னே மற்றுமொரு பதவி வகிப்பதால் தான் அவரை அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்க முடியாதென அரசாங்கத்தரப்பில் கூறப்படுகிறது.
அப்படியானால், கித்துல்கொடவுக்கும் மாயதுன்னேக்கும் இருவேறு நீதியா? எதிர்கட்சி என்ற வகையில் நாம் இந்நியமனத்தை கடுமையாக எதிர்க்கிறோம். இது அரசியலமைப்புக்கு உட்பட்டதல்ல இந்நியமனம் சட்ட பூர்வமற்றது" என்றார்.
லக்ஷ்மன் கிரியெல்ல
இதன் போது ஐ.தே.க.யின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கருத்து தெரிவிக்கையில்;
"பாராளுமன்ற செயலாளர் வெளி நாடு செல்லும் வேளையிலேயே பதில் செயலாளரை நியமிக்க முடியும். இந்நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் அவசியம்" என்றார்.
பிரதமர்
இதன் போது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா கருத்து தெரிவிக்கும் போது;
"கித்துல்கொடவின் நியமனம் தற்காலிகமானதேயாகும். ஜனாதிபதி அரசியலமைப்பின் அங்கீகாரமின்றியே அண்மைய காலங்களில் நியமனங்களை மேற்கொண்டார் அது போன்றே இந்நியமனமுமாகும்.
கித்துல்கொட பாராளுமன்ற பதில் செயலாளராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு உட்பட்டேயாகும். எவ்வகையிலும் இது அரசியலமைக்கு முரண்பட்டதல்ல" என்றார்.
இச்சமயம் ஆளும் தரப்பினர் தமது மேசைகளில் தட்டி பிரதமரின் கூற்றுக்கு வரவேற்புத் தெரிவித்த அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிட்டுப் பேசுகையில்;
ரணில்
"ஆளும் தரப்பினர் எப்படித்தான் சத்தமிட்டாலும் அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதை ஒரு போதுமே அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
சபாநாயகர்
இதன் போதும் சபாநாயகர் தெரிவித்ததாவது;
"பதில் செயலாளர் தம்மிக கித்துல்கொடவின் நியமனம் 14 நாட்களுக்கு மாத்திரமேயாகும். எனவே, அவரின் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டதேயாகும்.
இந்நிலையில், பதில் செயலாளரை சபைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்" என்றார். இதையடுத்து தம்மிக கித்துல்கொட சபைக்கு வருகைதந்தார்.
இதன் போது ஐ.தே.க. எம்.பி.க்கள் தம்மிக்க கித்துல்கொடவிற்கு எதிராக கூக்குரலிட்டனர். அவர்கள் சபைககுள் நடுவே வந்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே சபை நடவடிக்கைகளை சபாநாயகர் இடைநிறுத்தி வைத்தார்.
சபை நடவடிக்கைகள் 20 நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகிய போதும் ஐ.தே.க.வின் போராட்டம் காரணமாக சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமமேற்பட்டதுடன் சபை இரு தடவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன. எனினும், நிலைமை சீரடையாத நிலையில் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நடந்தேறியது.
அத்துடன், சூழல் பேணல் சட்டமும் தொடர்ந்த கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது.