* சபை அமர்வு மூன்றுதடவை இடைநிறுத்தம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துல்கொடவை நியமித்தமை தொடர்பாக சபையில் எதிரணியினர் எழுப்பிய கடும் ஆட்சேபனைகளால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதுடன் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார சபை அமர்வை மூன்று தடவைகள் இடைநிறுத்திவைத்தார்.
பாராளுமன்றம் நேற்றுக்காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகரின் வழமையான பணிகளைத் தொடர்ந்து தினப்பணிகள் ஆரம்பமாவதற்கு முன் எதிர்க்கட்சி பிரதம கொடரா ஜோன் மைக்கல் பெரேரா மேற்படி நியமனம் தொடர்பாக சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பினார்.
இதையடுத்து ஐ.தே.க. எம்.பிக்கள் சபாநாயகருடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். சபாநாயகருக்கு ஆதரவாக அமைச்சர்களும் களத்தில் இறங்கினர். இருதரப்பினரும் சபை நடுவே வந்ததையடுத்து செங்கோலை பாதுகாப்பதற்காகவும் சபாநாயகருக்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவும் படைக்கல சேவிதர்களும் உதவியாளர்களும் ஓடி வந்தனர்.
சபைக்கு நடுவே நின்ற ஐ.தே.க. எம்.பி.க்களுடன் அமைச்சர்கள் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை ஐ.தே.க. எம்.பி.தயாசிறி ஜயசேகரவுக்கும் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்குமிடையேயும் ஐ.தே.க.எம்.பி.ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கும் அரச தரப்பு எம்.பி.ரெஜி ரணதுங்கவுக்குமிடையேயும் இழுபறி நிலை ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் ஐ.தே.க. எம்.பி.ரேணுகா ஹேரத் புத்தகமொன்றை தூக்கி ரெஜிரணதுங்க மீது வீசினார். இதையடுத்து சபாநாயகர் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக 10 மணிக்கு அறிவித்தார். சபை மீண்டும் 10.30 மணிக்கு கூடியபோது மீண்டும் சபைக்கு நடுவே வந்த ஐ.தே.க. எம்.பி.க்கள் சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினப்பணிகளை ஆரம்பிக்க சபாநாயகர் எவ்வளவோ முயற்சித்த போதும் ஐ.தே.க.வினர் அதற்கு இடம்கொடுக்கவில்லை.
ஐ.தே.க. எம்.பிக்களுக்கு எதிராக அரசதரப்பினரும் கோஷங்களை எழுப்பவே சபை களேபரப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக 11.50 மணியளவில் அறிவித்தார். சபை மீண்டும் 12.30 மணிக்கு கூடியது. அப்போதும் சபைக்கு நடுவே வந்த ஐ.தே.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையை தொடர்ந்து நடத்த முடியாதநிலை ஏற்படவே சபை இடைவேளைக்கு உணவு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் 12.35 மணிக்கு அறிவித்தார்.
இதன் பின்னர் சபை மீண்டும் 1 மணிக்கு கூடியது. அப்போதும் ஐ.தே.க.வினர் சபாநாயகருக்கு முன்பாக கூடி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பாராளுமன்ற செயலாளர் பிரியாணி விஜயசேகரவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணை இருப்பதால் அதற்கு அனுமதிக்கும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை உரையாற்றுமாறு பணித்தார். இதையடுத்து ரணில் உரையாற்றினார். ரணில் உரையாற்றும் வரை ஐ.தே.க.வினர் அமைதியாக இருந்தனர்.
ரணில் உரையாற்றிய பின்னர் சம்பந்தன் எம்.பி.யை உரையாற்றுமாறு சபாநாயகர் பணித்த போது அதற்கு ஐ.தே.க.வினர் இடம்கொடாது மீண்டும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பின்னர் எந்தவொரு உறுப்பினரையும் பேசுவதற்கு ஐ.தே.க.வினர் விடவில்லை.
சில அமைச்சர்கள் ஐ.தே.க.வினரின் சபை அதிர்ந்த கோஷங்களுக்கு மத்தியில் உரையாற்றினர். அப்போது ஐ.தே.க.வினர் மேசைகளில் பலமாக தட்டி பெரும் சத்தங்களை எழுப்பினர். அத்துடன் `மனித உரிமைகளுக்கு பாதுகாப்பளி!' `அரசியலமைப்பை மீறாதே' `கித்துல்கொட வெளியே போ'என்ற கோஷங்களை தொடர்ச்சியாக எழுப்பியதையடுத்து 2.25 மணிக்கு மறுநாள் வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.