* பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச சூளுரை; சீசருடன் தன்னை ஒப்பிடுகிறார்
ஜே.வி.பி.யின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மோசமான சூழ்ச்சியின் மூலம் தான் நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முடிவை கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் அறிவிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்த அக்கட்சியின் பிரசார செயலரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ச, வரலாறு தரும் தீர்ப்பைத் தவிர சூழ்ச்சிகள் மூலம் கொடுக்கப்படும் தீர்ப்புகளுக்கு தான் ஒரு போதும் அடிபணிய போவதில்லையென்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடிய பின்னர் அவரின் அனுமதியுடன் விசேட அறிக்கையொன்றை விடுத்து விமல் வீரவன்ச உரையாற்றினார்.
சுமார் ஒரு மணி நேரம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
ஜே.வி.பி.கட்சியில் இருபது வருடங்களுக்கு முன்னர் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன்.அதன் பின்னர் கட்சியின் வளர்ச்சிக்காக நான் சந்தித்த துயரங்கள், எண்ணிலடங்காதவை. ஆனால், கட்சி தனது வண்டிலுக்கு என்னை சக்கரமாக பயன்படுத்திவிட்டு இப்போது கழற்றி விட்டுள்ளது.
கட்சிக்கு தீங்கு ஏற்படக் கூடிய எந்தச் செயலிலும் நான் ஈடுபடாத நிலையில் என்னை ஏன் இந்த நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர் என்பதுதான் எனக்கு புரியவில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்தியப் படை எமது தாய் மண்ணில் காலடி வைத்தது. இதனை எதிர்த்து எமது தாய் மண்ணின் மீதிருந்த பற்றுக் காரணமாகவே நான் ஜே.வி.பி.யில் இணைந்தேன். நான் இக்கட்சியில் இணைந்தால் நஞ்சு குடிப்பேன் என்று தந்தை மிரட்டினார் நான் கேட்கவில்லை.
நான் ஜே.வி.பி.யில் இணைந்ததால் மனநோயால் பாதிக்கப்பட்ட எனது தாய் இன்று கூட என்னை நினைத்துப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
எனது தந்தையை களுத்துறைப் பொலிஸார் கைது செய்தனர். எனது இரு சகோதரர்கள் சிறை சென்றனர். எனது தாய் மன நோயால் பாதிக்கப்பட்டார். என்னை இராணுவம் பின் தொடர்ந்தது. சில இடங்களில் மயிரிழையில் கூட உயிர் தப்பினேன். இவை நான் இக்கட்சிக்காக பட்ட துயரங்களில் சிறிதளவானவை.
நான் லக்பிம, ஹிரு பத்திரிகையில் பணியாற்றிய போது பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜே.வி.பி.யின் கொள்கைகளை முன்னெடுத்தேன். ஜே.வி.பி. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட போது அதற்காக நான் செய்தவை ஏராளம்.
அன்று ஜே.வி.பியிலிருந்த பலர் பிரிந்து சென்ற போது நானும் சென்றிருக்க வேண்டும். ஆனால், கட்சிப் பிணைப்பால் நான் அவ்வாறு செய்யவில்லை.
எனக்கு அரசியல் ரீதியாகவே எதிரிகள் உள்ளனர். தனிப்பட்ட ரீதியில் எந்த எதிரியும் எனக்குக் கிடையாது. தாய்நாட்டிற்குள் வெளிநாட்டு சக்திகளை கொண்டு வர முயற்சிப்போரும் பயங்கரவாதத்திற்கு சார்பானோருமே என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்பே என் மீதான பாரிய சதித் திட்டம் அரங்கேறத் தொடங்கியது. அரசியல் ரீதியாக என்னை அழிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.
எனது தலைமுடி, எனது தொலைபேசி,நகம், முகம், எனது மனைவி, பிள்ளைகள் என அனைத்தையும் விமர்சித்தார்கள். அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க நான் முற்படும் போதெல்லாம் தடுக்கப்பட்டேன். கட்சி என்னுடன் இருக்குமென நினைத்தேன். அது நடக்கவில்லை.
எனக்கெதிராக வெளியிலிருக்கும் சதித் திட்டத்துடன் கட்சிக்குள்ளும் சூழ்ச்சித் திட்டம் இருந்தது. கட்சிக்குள் நான் பிரிவினையை ஏற்படுத்துவதாக சிலர் நினைத்தனர். குற்றங்களை சுமத்தினர். நான் மிகவும் பொறுமையுடன் இருந்தேன். எனது எண்ணங்கள் உணர்வுகளுக்கு தவறான பொருள் கோடல்களை உருவாக்கி எனக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர். நான் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டேன். மத்திய குழு முன் நான் பல தடவை அழுதுள்ளேன். இதனை கூற நான் வெட்கப்படவில்லை.
தற்போது என் சார்பாக கட்சி தீர்மானமொன்றை எடுத்துள்ளது. அதாவது கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் என்னை நீக்குவதாக மத்திய குழுவினர் தீர்மானம் எடுத்துள்ளனர். கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியையாவது தருமாறு கேட்டேன். ஆனால்,அதற்கு பதிலில்லை.
என்னைக் கட்சியிலிருந்து நீக்கிய முடிவை கிழக்கு மாகாண சபை தேர்தலைக் கருத்தில் கொண்டு வெளியிட மத்திய குழு விரும்பவில்லை. ஏனெனில், அதனால், கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமென அச்சப்படுகிறார்கள். அதனால், மே 10க்கு பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்படும்.
கட்சிக்குள் தலையாட்டி பொம்பையாக இருக்க நான் விரும்பவில்லை' எமது கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களின் குரல் மேல்மட்டத்திற்கு கேட்பதில்லை.அதனை நான் கேட்க வைத்தேன். அதனால், தான் எனக்கு இன்று இந்த நிலைமை.
என்னைப்பற்றி தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. எதிரி செய்வதை விட எனது சகோதரர்கள் செய்வது என்னை கொடுமைப்படுத்துகிறது.என்னை துரோகி என்கின்றனர்.நான் என்ன துரோகம் செய்தேன்.
சர்வதேசத்தின் சதியினாலேயே நான் இன்று பழிவாங்கப்பட்டுள்ளேன். சர்வதேச சக்திகளின் பகடைக்காய்கள் இந்நாட்டில் உள்ளன. அவர்கள் நாட்டுப் பற்றாளர்களின் வாயை அடக்கப் பார்க்கின்றனர். இல்லையெனில் உயிரை எடுக்கின்றனர்.
என்னை கட்சியிலிருந்து அகற்றுவதற்காக எந்த சக்தி உங்களை வற்புறுத்தியது? என்னை நீக்கிய செய்தி கேட்டு பாற்சோறு சாப்பிட்ட பலர் இங்குள்ளனர்.
நான் இப்பொழுது மனதால் அழுது கொண்டிருக்கிறேன். ஏன் என்னை இந்த நிலைக்குள்ளாக்கினீர்கள்? என்னை வெளியேற்றுவது எந்தளவுக்கு நியாயமானது? இது நியாயமற்ற தீர்மானம். ஆனாலும், நான் இதற்கு முகம் கொடுத்தேயாக வேண்டும்.
எமது நாடு கொசோவா நிலையில் உள்ளது. சர்வதேச சக்திகள் தமது தரகர்கள் மூலம் செய்யும் இவ்வாறான வேலைகளுக்கு நான் ஒரு போதும் அடிபணிய மாட்டேன்.
நான் இந்தக் கட்சியின் விளம்பில் கூட இருக்கத் தகுதியற்றவனாகி விட்டேனா? மத்திய குழு உறுப்பினர்கள் எவரும் என்னுடன் பேசக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் என்ன குஷ்டரோகியா? அல்லது தொற்று நோயாளியா?
தற்போது நான் வகித்த பொறுப்புகள் எதுவும் என்னிடம் இல்லை. கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சில வேளைகளில் அமைச்சர் ஜெயராஜுக்கு ஏற்பட்ட நிலைகூட நாளை எனக்கு ஏற்படலாம்.
தீய சக்திகளை நோக்கி கட்சி இழுத்துச் செல்லப்படுவதை எனது கட்சித் தோழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.என்னை அகற்றுவதன் மூலம் ஏன் சந்தோஷமடைகிறார்களோ தெரியவில்லை.
ஆனால், எனது பணியிலிருந்து நான் விலக மாட்டேன். நான் தொடர்ந்து செயற்படுவேன். தாயகத்திற்காக நான் போராடுவேன். இறுதி மூச்சு வரை போராடுவேன். நாம் மனிதர்கள் எம்மிடம் குறைகள் இருக்கும். அதனை நட்பு ரீதியாக தீர்த்துக் கொள்ள முடியும்.
பல் துலக்கிய குச்சியை தூக்கி எறிவது போல் எம்மை தூக்கியெறியக்கூடாது. சந்தேகத்தின் மீது தீர்மானங்களை எடுக்கக் கூடாது. ஜூலியஸ் சீசருக்கு என்ன நடந்தது? எனக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு உதவிய பலர் இங்குள்ளனர்.
வெளிநாட்டு சக்திகள் எமது கட்சியை அழிக்கப் பார்க்கின்றனர். அதற்கு எமது தோழர்கள் இடம் கொடுக்கக் கூடாது.கட்சியை மக்கள் பாதுகாக்க வேண்டும். மக்கள் என்னுடன் இருப்பார்கள். சூழ்ச்சிக்காரர்களின் தீர்ப்பை ஏற்க நான் தயாரில்லை.
இனிமேல் கட்சி தொடர்பாக நான் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன். அதனால், கட்சி தொடர்பாக ஊடகங்கள் என்னிடம் கேள்வி கேட்பதை தவிர்க்க வேண்டுமெனக் கோருகிறேன் என்றார்.
விமல் வீரவன்ச பேசி முடித்த பின்னர் ஜே.வி.பி.யின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலர் எழுந்து வந்து விமல் வீரவன்சவுக்கு கை கொடுத்து கட்டியணைத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
விமல் வீரவன்ச உரையாற்றிய போது கட்சி முக்கியஸ்தர்களான லால் காந்த, விஜித ஹேரத், ஹந்துநெத்தி, பிமல் ரட்னாயக்க, சந்திரசேன விஜயசிங்க ஆகியோர் இறுகிய முகங்களுடன் அமர்ந்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில், பிரதமர் ஆகியோரும் விமல் வீரவன்சவின் உரையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.