இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் தங்களது ஆக்ரோஷமான பந்துவீச்சு தொடருமென்று தென்னாபிரிக்க அணிப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய - தென்னாபிரிக்க அணிகளிடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆமதாபாத்தில் நடந்த 2 ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய - தென்னாபிரிக்க அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;
இந்திய அணியின் வலுவான துடுப்பாட்ட வரிசையை வீழ்த்த எங்களது ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சு திட்டம் தொடரும். கான்பூர் ஆடுகளத்தை பார்வையிட்ட பின்னர் அணியில் 2 ஆவது சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும். கான்பூர் ஆடுகளம் வெடிப்பு ஏற்படும் வகையில் தயாரிக்கும் தவறை இந்தியா செய்யாது. அப்படிச் செய்தால் அது எங்கள் அணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும்.
ஐ.பி.எல்.போட்டி வருவதால் இந்திய அணி வீரர்களின் கவனம் சிதறல் ஏற்பட்டு ஆமதாபாத் போட்டியில் தோல்வியேற்பட்டதாக சொல்வது தவறானதாகும். தோல்வியை சந்திக்கும்போது இது போன்ற பிரச்சினைகள் வரும். இந்திய அணி வெற்றிபெற்றிருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திருக்காது.
2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில் டிராவிட் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாகும். அவரது விக்கெட்டை வீழ்த்திய ஸ்டெயின் அந்த பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் இருந்தது. டிராவிட் நிலைத்து நின்று ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்.
சென்னை டெஸ்ட் போட்டியில் நாங்கள் பந்தை சுவிங் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தியது தவறாக அமைந்து விட்டது. அதன் பிறகு சரியான அளவிலும், திசையிலும் ஆக்ரோஷமாக பந்து வீசுவது என்று திட்டம் தீட்டினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்திய வீரர்கள் `புரன் புற்' பயன்படுத்தி சிறப்பாக ஆடக்கூடியவர்கள். எனவே அப்படி விளையாட இடம்கொடுக்காத வகையில் பந்துவீசத் திட்டமிட்டு செயல்படுத்தியது நன்றாக அமைந்தது. ஆமதாபாத் ஆடுகளம் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்தார்.