இந்திய பிரிமியர் லீக் போட்டிக்கு டெண்டுல்கர் உடல்தகுதி பெறுவார் என்று மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 18 ஆம் திகதி தொடங்குகிறது.
காயம் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது போட்டியில் ஆடாத டெண்டுல்கர் கடைசி டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அவர் பிரிமியர் லீக் போட்டிக்கு உடல் தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
இந்தநிலையில், மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் மும்பையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது;
"டெண்டுல்கர் எந்த ஒரு போட்டியிலும் ஆடாமலிருக்க விரும்பக்கூடிய வீரர் அல்ல. அவர் உடல்தகுதியில் பிசியோதெரபிஸ்ட் கவனம் எடுத்துக்கொள்வார். பிரிமியர் லீக் போட்டிக்குள் டெண்டுல்கர் உடல்தகுதி பெற்றுவிடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
தொடக்க ஆட்டக்காரராக யார் ஆடுவார் என்பது குறித்து எதிரணி மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து அறிந்த பிறகு முடிவு செய்யப்படும்" என்றார்.