தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ஆர்.பி.சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முனாப் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்மித் தலைமையிலான தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆமதாபாத்தில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாயத்தில் படுதோல்வியடைந்தது. இதனால், தென்னாபிரிக்க அணி தொடரில் 1-0 என்று முன்னணி வகிக்கிறது.
இந்த நிலையில் இந்திய - தென்னாபிரிக்க அணிகளிடையேயான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் 11 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான இந்திய அணி ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முதல் 2 டெஸ்டிலும் ஒரு விக்கெட்டும் எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய ரமேஷ்பவார் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்பட்டு வரும் கப்டன் கும்பிளே, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோருக்கு 10 ஆம் திகதி உடல் தகுதி சோதனை நடக்கிறது. உடல் தகுதி சோதனையை 3 தேர்வாளர்கள் கண்காணிப்பார்கள். உடல் தகுதி சோதனை முடிவுக்குப் பின்னர் 14 பேர் கொண்ட அணி முடிவாகும். கும்பிளே உடல் தகுதி பெறாத பட்சத்தில் ரமேஷ் பவார் ஆடும் அணியில் இடம்பிடிப்பார்.
காயம் காரணமாக 2 ஆவது டெஸ்டில் இருந்து விலகிய டெண்டுல்கர் 3 ஆவது டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் சரியாக ஆடாவிட்டாலும் அதிர்ஷ்டவசமாக அணியிலிருந்து கழற்றி விடப்படவில்லை.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:
கும்பிளே (கப்டன்), வாசிம் ஜாபர், ஷேவாக், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமண், கங்குலி, தோனி (துணை கப்டன்), இர்பான் பதான், ஹர்பஜன்சிங், ஷ்ரீசாந்த், யுவராஜ்சிங், முகமது கைவ், பியுஷ் சாவ்லா, முனாப் பட்டேல், இஷாந்த் சர்மா, ரமேஷ் பவார்.