லாஸா: திபெத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகளுக்குக் காரணமான ஆறு புத்த பிக்குகள் உட்பட முப்பது பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனைகள் விதித்துள்ளது.
திபெத் தலைநகர் லாஸாவில் கடந்தமாதம் நடைபெற்ற பேரணியின்போது கலவரம் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்த அதேநேரம், ஏராளமான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுமிருந்தன.
இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட புத்த பிக்குகள் உட்பட்ட ஏராளமானோரை சீன அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில் அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் லாஸா நகரிலுள்ள இடைக்கால மக்கள் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 6 பிக்குகள் உட்பட 30 பேருக்கு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதில் ஒரு புத்தபிக்குவிற்கு ஆயுள் தண்டனையும் மூவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஏனைய இருவருக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.