இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரியுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்துவது தொடர்பாகவே இப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளது.
நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டுபாயிலுள்ள சர்தாரியின் வாசஸ்தலத்தில் இச் சந்திப்புக்கள் நடைபெறவுள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை பணிக்கமர்த்துவது தொடர்பில் இருதரப்புக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.
டுபாய்க்கு புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஷெரீப் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து இணைந்திருக்கவே தான் விரும்புவதாகவும் ஆனால் இரு தலைவர்களும் (நவாஸ் ஷெரீப், சர்தாரி) முன்னர் இணங்கிக் கொண்டதற்கேற்ப நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்தாவிடின் பாகிஸ்தான் ஜனநாயகம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென எச்சரித்துள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தங்களினூடாகவே நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்தும் நடவடிக்கை நடைபெறவேண்டுமென சர்தாரி விரும்புவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நீதிபதிகளை பணிக்கமர்த்தும் விவகாரம் தொடர்பிலான கடைசி முயற்சியாகவே இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.