* விடுவிக்கப்பட்ட மாணவன் தெரிவிப்பு
சம்பவதினம் என்னைப் பிடித்துச் சென்றவர்கள் முதலில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பின்னர் வேறு ஒரு வாகனத்தில் மாற்றி ஏற்றிச் செல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்ட செல்வராசா மணிவண்ணன் என்ற 17 வயது மாணவன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டதாகவும், சோறும், சம்பலுமே உணவாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது; கண்டியில் உயர்தர வகுப்பு படிக்கிறேன் என்று நான் கூறியதும் கண்டியில் குண்டு வைக்கவா சென்றாய் என மிரட்டினார்கள்.
அத்துடன் கண்டியில் எங்கெல்லாம் போய் வந்தாய் எனவும் விசாரணை செய்தனர். இராணுவ சீருடையில் இருந்தவர்களே அங்கு காணப்பட்டனர்.
எனக்கு சிங்களம் ஓரளவுக்கு தெரியும் என்பதால் அவர்களின் சகல கேள்விகளுக்கும் சிங்கள மொழியிலேயே பதிலளித்தேன்.
வீட்டில் இருந்து வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டதும், கண்கள் கட்டப்பட்டது. என்ன வாகனம் என்று எனக்குத் தெரியாது. வாகனம் அதிக நேரம் சென்றது. பின்னர் வேறொரு வாகனத்தில் ஏற்றினார்கள்.
தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எனது அப்பாவுடன் இரு முறை தொலைபேசியில் உரையாட அனுமதித்தனர்.
எனது கண்கள் நீண்ட நேரமாக கட்டப்பட்டு இருந்ததால் தற்போது பார்வை குறைவாகவே உள்ளது. என்னைக் கடத்தியவர்கள் யார் என்பது எனக்குத்தெரியாது.
நிலத்தில் படுக்கும் போது கை, கால் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு வெளிச்சத்தம் கேட்காதவாறு எனது காதுகள் அடைக்கப்படும்.
கடத்தியவர்கள் என்னை நல்ல முறையில் தான் நடத்தினார்கள். ஆனால் என்ன காரணத்துக்காக என்னைத் தடுத்துவைத்தனர் என்பதும் தெரியவில்லை.
தடுத்து வைத்திருந்தவர்கள் என்னிடம் எந்தக்கோரிக்கையையும் விடுக்கவில்லை. நேரத்துக்கு நேரம் சாப்பாடு தந்தார்கள்.
ஆரம்பத்தில் நான் உணவை உண்ண மறுத்தேன் ஆனால், உணவை உண்ணுமாறு கட்டாயப்படுத்தினார்கள்.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், வீட்டுக்குப் போகலாம் எனவும் கூறினார்கள்.
ஆனால் அன்று விடுவிக்கப்படவில்லை. கொஞ்ச நேரத்துக்குப் பின்னர் புறப்படத் தயாராகுமாறு கூறினார்கள். இரவு அந்த நேரம் தெரியாது.
வாகனம் ஒன்றில் ஏற்றினார்கள். ஒரு மணி நேரமாக அந்த வாகனம் ஓடியது. வவுனியா மகாவித்தியாலயம் அருகில் இறக்கிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் போகும்படி கூறினார்கள். திரும்பிப் பார்த்தால் சுடுவோம் என்று கடும் தொனியில் கூறினார்கள். நானும் அவர்கள் கூறியபடி திரும்பிப்பார்க்காமல் போனேன்.
அங்கிருந்து சூசைப்பிள்ளையார் குளத்தில் உள்ள எனது வீட்டுக்கு நடந்து வந்தேன்.
வீட்டுக்கு வந்ததும் பெற்றோர்களும் எனது சகோதரர்களும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அன்று காலை 8 மணியளவில் அப்பாவுடன் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விடயங்களை தெரிவித்தேன் .
எனது வாக்கு மூலம் 20 பத்திரங்களில் பதிவு செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு பொலிஸார் தெரிவித்திருந்தனர் என்றார்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு பெற்றோருடன் வீட்டில் இருந்தபோது இந்த மாணவன் கடத்திச் செல்லப்பட்டு 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார்.