* மேதினச் செய்தியில் ரணில்
நீதியும், நியாயமும் மேலோங்கக் கூடியதான மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், வறுமைக்கோட்டிலிருந்து உழைக்கும் வர்க்கத்தை மீட்டெடுப்பதற்கும் பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டுத் குரல் எழுப்ப வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேதினத்தையொட்டி அவர் விடுத்திருக்கும் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களுக்கான உன்னத தினமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. வரலாற்றில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்டதே இந்த மேதினமாகும்.
என்னதான் விடுதலைப் போராட்டங்களை நடத்தினாலும் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து இன்னல்களை எதிர்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களால் மீட்சி பெறுவதென்பது பகற்கனவு போன்றே உள்ளது.
இந்த நாட்டு மக்கள் இன்று முகம்கொடுக்கும் சவால்கள், நெருக்கடிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அவசரம் உருவாகியுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்டப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை இன்னமும் தனது கைப்பொம்மைகளாகவே வைத்திருக்க முயற்சிக்கின்றன. சுதந்திரம்,உரிமை பற்றியெல்லாம் என்னதான் பேசினாலும் அவை நடைமுறையாவதில் இன்னமும் கேள்விக்குறிதான் காணப்படுகிறது.
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாகவும், உயர்ந்த நிலையிலும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க நாம் ஒன்று பட்டுக் குரல் எழுப்ப வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்தின் உயர்சிக்காக துணை நின்று போராடவும், குரல் எழுப்பவும் ஐக்கிய தேசியக்கட்சியும், அதனோடு இணைந்த தொழிற்சங்கங்களும் தயாராகவுள்ளது என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
உழைக்கும் வர்க்கத்தின் விடிவுக்காக இந்த தொழிலாளர் தினத்தில் பிரார்த்தித்து நாட்டின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்கு தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றேன்.