கிழக்கு மாகாண சபையில் திருகோணமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே நீதிமன்றம் இதனை அறிவித்தது.
கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தெரிவத்தாட்சி அலுவலரினால் நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்தும் தமது மனு நிராகரிக்கப்பட்டமை சட்ட விரோதமானதெனவும் தமது வேட்பு மனுவை ஏற்கும் வரை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியுமே இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனு மீதான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலை நடைபெற்றபோது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி வாதாடியதுடன் பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் ஆகியோர் ஆஜராகினர்.
கிழக்கு மாகாண சபைக்கான தபால் மூல வாக்களிப்பும் நிறைவடைந்த நிலையில் எக்காரணம் கொண்டும் திருகோணமலை மாவட்டத் தேர்தலை பிற்போடக் கூடாதெனவும் இவர்கள் நீதியரசரிடம் சுட்டிகாட்டியுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைப்பது குறித்த தீர்ப்பை எதிர்வரும் 8 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.