இன்றைய தினம், சிந்திய வியர்வைக்கு ஊதியம் கேட்டு எழுந்த உழைக்கும் மக்கள் தினம். சுமந்தவிலங்கை சிதற உடைக்க எழுந்த மக்கள், குருதியில் சரிந்து உரிமை பெற்ற தினம்! இழந்த உரிமைகளுக்காக எழுந்த மக்கள், பிறந்த உரிமைகளை பாதுகாத்து, இன்னமும் பிறக்க வேண்டிய உரிமைகளுக்காக போர்க்கொடி உயர்த்தும் தினம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளது.
உலகத் தொழிலாளர்களோடு ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களும் ஒன்றுபட்டு எழுந்து தமது உரிமைகளுக்காக போராடவும் வாதாடவும் வேண்டிய வீரிய தினம்! இன்றைய தினத்தில் ஒடுக்கப்படுகின்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் இன, மத பேதங்களை கடந்து இன ஐக்கியத்திற்காகவும் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சிக்காகவும் உழைப்பதற்காக உறுதிகொள்ளும் தினம் எனவும் தெரிவித்துள்ள அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது;
இழந்த உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருந்த உரிமைகளையும் பறிகொடுத்த துயர் கதை தொடர்கின்றது. வெறும் அவலங்களுக்குள் மட்டும் சிறைப்பட்டு நிற்கும் எமது மக்கள் ஏன் என்று கேள்வி கேட்பதற்கும் உரிமை அற்றவர்களாக வாழ வேண்டிய நிலை! சுதந்திரமாக உண்மைகளை பேசவும் எழுதவும் விரும்பிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் உழைக்கும் மக்களின் உரிமைக்காக தொழிற்சங்கம் நடத்தவும் இருக்க வேண்டிய அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
எமது மக்களின் பெயரால் தொடர்கின்ற அழிவு யுத்தம் எமது மக்களையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இடப்பெயர்வுகளையும் வீடிழந்து, சொந்த நிலமிழந்து அலையும் அகதி வாழ்வையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. காணாமல் போதல், கண்ட இடத்தில் சுட்டுக்கொன்றொழித்தல் என அச்சம் தரும் வாழ்வையே எமக்கு மிச்சமாக்கி விட்டிருக்கின்றது.
உழைக்கும் மக்களின் உழைக்கும் சுதந்திரத்திற்காகவும் ஒடுக்கப்படுகின்ற எம் தேசத்து மக்களின் உரிமைகளுக்காகவும் முடிவுற்று தொடரும் அழிவு யுத்தம் தீர்வு தேடித் தரப்போவதில்லை. நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் நின்று மக்களுக்காக உழைக்கும் ஜனநாயக சக்திகள் பெறுகின்ற அரசியல் அதிகாரங்களே எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டு அவர்களை சுதந்திரமான ஒரு தேசத்தில் வாழ வைப்பதற்கு வழி சமைக்கும். இன்று எம் மக்களுக்கு சோறும் தேவை! சுதந்திரமும் தேவை! அதற்கு தேவை நடைமுறை சாத்தியமான வழிமுறையில் மக்கள் நலன் சார்ந்து உழைக்கும் ஜனநாயக சக்திகளுக்கான அரசியல் அதிகாரங்களே! அடக்கும் அதிகாரங்களை உடைத்தெறிந்து அனைத்து அதிகாரங்களையும் எமது மக்களிடம் ஒப்படைக்க அனைத்து மக்களும் உறுதிகொண்டு எழ வேண்டும் என உழைப்பவர் தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.