ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தில் (யு.என். டி.பி.) பணியாற்றும் ஒருவர் நேற்று புதன்கிழமை நண்பகல் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த தியாகராஜா பிரபாகரன் என்ற இவர் கிளிநொச்சியில் உலக உணவுத் திட்டத்தில் பணியாற்றுகின்றார்.
கிளிநொச்சியிலிருந்து நேற்று மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருக்கையிலேயே, நண்பகல் 12.45 மணியளவில் ஈரப்பெரியகுளம் இராணுவ சோதனை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் இவரிடமிருந்து மைக்ரோ பிஸ்ரல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, இந்த மைக்ரோ பிஸ்ரலை மட்டக்களப்பில் ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக விடுதலைப் புலிகள் தனக்குப் பணம் கொடுத்ததாகவும் அவர் கூறியதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர் வவுனியா பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர்.