தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்ட `பிரபாகரன்' சிங்களத் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தமிழ்நாடு தலைமை நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் நேற்று தொல்.திருமாவளவன் கூறியதாவது ;
ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் "பிரபாகரன்" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட சிங்களப் படப்பிரதிகளை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து இந்திய மத்திய அரசு கைப்பற்றி முற்றாக அழிக்க வேண்டுமென்று சென்னை மாநகர முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தோம். அந்த வழக்கை விசாரித்த அந் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை அப்படத்துக்கு தடை விதித்திருந்தது.
இந் நிலையில் வழக்கின் மீது உடனே விசாரணை நடத்தவேண்டுமென்று சிங்கள திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சட்ட விதிமுறைகளுக்கு எதிராக வழக்கைத் தொடருவோரின் கையொப்பம் இல்லாமல் சட்டவாளரே கையெழுத்திட்டு அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதனைப் பற்றி கவலைப்படாமலேயே கீழ் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதால் எமக்கு ஐயம் ஏற்பட்டது. கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு உள்நோக்கமும் அழுத்தங்களும் இருப்பதாகக் கருதுகின்றோம்.
எனவே முதலாவது உரிமையியல் நீதிமன்றத்திலிருந்தும் அந்த நீதிபதியிடமிருந்தும் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென்று கோரி தலைமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். எமது மனுவை ஏற்று எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி வரை கீழ் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ள தலைமை நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தலைமை நீதிமன்றில் 13 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.