ராமேஸ்வரம்: அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 60 பேர் இந்திய கரையோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 படகுகளில் இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பெரும்பாலானோர் சிங்கள மீனவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் பின்னர் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டு அங்குள்ள கரையோரக் காவல் படையினரால் மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களது 12 படகுகளும் மண்டபம் கரையோரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அனைவரையும் இலங்கைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடற்பரப்பினுள் நுழைந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்தளவு எண்ணிக்கையானோர் ஒரே தடவையில் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.