ஹர்பஜன்சிங் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதால் இந்திய கிரிக்கெட் சபை தனது விசாரணையில் கருணை காட்டுமென்று பரூக் என்ஜினீயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் வீரர் ஷ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த மும்பை இந்தியன்ஸ் தற்காலிக கப்டன் ஹர்பஜன்சிங்குக்கு 11 ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தடையும் 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் பரூக் என்ஜினியர் விசாரணை நடத்தி இந்தத் தீர்ப்பை வழங்கினார். இது ஐ.பி.எல். சார்பில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவாகும்.
அடுத்ததாக இந்திய கிரிக்கெட் சபை ஹர்பஜன்சிங் மீது தனியாக விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக விசாரணை நடத்த வக்கீல் சுதிர் நானாவதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை இந்திய கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிப்பார். அதன் பின் ஒழுங்கு நடவடிக்கை குழு என்ன தண்டனை என்பதை அறிவிக்கும். ஹர்பஜனுக்கு 5 டெஸ்ட் அல்லது 10 ஒரு நாள் போட்டிகளில் தடை விதிக்க ஐ.சி.சி. விதியில் இடமுள்ளது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி நடுவர் பரூக் என்ஜினியர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
ஹர்பஜன்சிங்குக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் கடுமையானது என்பதை இந்திய கிரிக்கெட் சபை உணர்ந்திருக்குமென்று உறுதியாக சொல்ல முடியும் . எனவே இந்திய சபை ஹர்பஜன்சிங் மீது கருணை காட்டுமென்று நான் நம்புகிறேன். ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய சபை என்ன செய்ய வேண்டுமென்று என்னால் அதுவும் சொல்ல முடியாது.
ஹர்பஜன்சிங்கின் தவறு மிகப் பெரியது. இதற்கு முன் அவர் இது போன்று தவறு செய்ததில்லை அவரைக் குற்றவாளியாக கருத வீடியோ ஆதாரம் வலுவாக இருந்தது. குத்துச்சண்டை, கால் பந்து போட்டிகளில் தான் உடல் ரீதியாக உரசலிருக்கும். ஆனால் கிரிக்கெட்டில் அது கிடையாது. இருப்பினும் சில சமயம் உணர்ச்சி வேகத்தில் இது போன்று நடந்து விடுகிறது. வாழ்க்கை முழுவதும் இது பற்றி ஹர்பஜன்சிங் வருத்தப்படுவாரென்றும் தெரிவித்தார்.