ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்ட ஹர்பஜனுக்கு இன்னொரு அதிர்ச்சி. அவரது படங்கள் இடம்பெற்ற விளம்பர `பனர்'களை மும்பை இந்தியன்ஸ் அணி அகற்றி வருகிறது.
மொகாலியில் நடந்த 10 ஆவது லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கைகுலுக்க வர, ஆத்திரமடைந்தார் ஹர்பஜன். அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இதனால், அதிர்ந்து போன ஸ்ரீசாந்த் மைதானத்தில் கதறி அழுதார். இதையடுத்து ஹர்பஜனுக்கு 11 ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அவருக்கு 3 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும். அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இப்படி ஹர்பஜன் `இமேஜ்' மோசமடைந்துள்ளதால், அவரது படங்கள் இடம்பெற்றுள்ள பனர்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அகற்றி வருகிறது. மும்பை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள விளம்பரங்களில் இப்போது ஹர்பஜன் படமில்லை. அணியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ள வீரர்கள் பட்டியலிலிருந்தும் ஹர்பஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரிலையன்ஸ் முகேஸ் அம்பானி 3.40 கோடி ரூபா கொடுத்து ஹர்பஜனை ஏலத்தில் வாங்கினார். தடை காரணமாக இவர் முதலில் பங்கேற்ற இரு போட்டிக்கான சம்பளம் 48 இலட்சம் ரூபா மட்டுமே கிடைக்கும். சச்சின் இல்லாத நிலையில் கப்டன் அந்தஸ்தில் களமிறங்கிய ஹர்பஜனின் நிலைமை இப்போது பரிதாபமாக உள்ளது. இவரது படங்களை கூட அகற்றும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் மீது தென் ஆபிரிக்க பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் புகார் கூறியுள்ளார். சமீபத்தில் டெஸ்ட் தொடரின் போது மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீசாந்த் `பபூன்' சேட்டைகள் குறித்து இந்திய அணியின் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒன்றாக விளையாடியவர்கள் என்று கூட பார்க்காமல் தேவையில்லாமல் ஆக்ரோஷம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர் கூறுகையில்;
`ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது கைவ் ஆட்டமிழந்த போது ஷ்ரீசாந்த் ஆர்ப்பரித்தார். இது அவரை வம்புக்கு இழுப்பது போல இருந்தது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. களத்தில் காட்டும் கோமாளித்தனமான சைகைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.