* தே.தோ.தொ.கா. பிரதிப் பொதுச் செயலாளர்
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் ஆயுதக் கலாசாரத்தையும் இனவாதக் கொள்கையையும் முற்றாக ஒழித்து சகல இன மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒரு சூழலை இன்றிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி உருவாக்கும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்த அவர்;
கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யுத்த சூழ்நிலையினாலும் சுனாமியின் தாக்கத்தினாலும் இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் பல்லாயிரக் கணக்கில் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது வரை இவர்களை மீள் குடியமர்த்த முயற்சிக்காத அரசு தேர்தல் காலத்தில் மாத்திரம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்ட ஆரம்பித்திருப்பது கேலியான ஒரு விடயமாகும்.
இதனால் யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களிலேயே குடியேற்றுவதற்கான சட்ட ஒழுங்குகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும்.
கிழக்கு மாகாணத்தில் மீன்பிடிப்பதற்கு தற்போது உள்ள தடைகளை முற்றாக நீக்கி பாதுகாப்பு பிரிவினருக்குப் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் மீன் பிடித்தொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான சட்ட திருத்தங்களையும் ஐ.தே.கட்சி மேற்கொள்ளவுள்ளது.
எனவே ஆயுதக் கலாசாரத்தை ஒழித்து, கப்பம் பெறுவதை நிறுத்தி, நீடித்த ஒரு சமாதானத்தை உருவாக்கி சகல இன மக்களும் இன ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கான ஒரு சூழலை கிழக்கில் ஆரம்பிப்போம் எனவும் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.