* ஐ.ம.சு.மு. நம்பிக்கை
டிட்டோகுகன்
தமிழ், சிங்களம், முஸ்லிம்களான மூவின மக்களும் சமமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் இன்று சனிக் கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் தெளிவான வெற்றியை மக்கள் பெற்றுத்தருவார்களென நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இதன் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின், வடக்குக் கிழக்கு இணைந்த தனித் தமிழீழக் கனவு தகர்த்தெறியப்படப் போவதாவும் சுட்டிக்காட்டியுள்ளது. கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக கொழும்பிலுள்ள மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன.
அமைச்சர் பிரேமஜயந்த இதன்போது பேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில்;
`எமது கட்சியைப் பொறுத்தவரை நாம் சக்திமிக்கதும், பயன்தரக்கூடியதுமான பிரசார நடவடிக்கைகளை நடத்தி முடித்திருக்கிறோம். சுதந்திர முன்னணி சார்பில் 18 முஸ்லிம் வேட்பாளர்களும், 15 தமிழ் வேட்பாளர்களும், 11 சிங்கள வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களிடையே எந்த முரண்பாடும் கிடையாது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் சரிசமமாக வாழ்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையிலும், வடக்கு - கிழக்கு மீள இணைக்க எதிரானவர்கள் என்பதன் அடிப்படையிலும் அம்மக்கள் எமக்கு வெற்றியை ஈட்டித் தருவார்களென நாம் நம்புகின்றோம்" என்றார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
இதேநேரம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு பேசுகையில்;
"கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் மூலம் நாட்டைப் புதிய வழியில் இட்டுச் செல்லப் பார்க்கின்றோம். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வுக்கு இதுவொரு முக்கிய சக்தி ஸ்தானமாகும்" என்றார்.
அமைச்சர் நவீன் திஸாநாயக்க
இதேநேரம், சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை மக்கள் தங்களுக்கு அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் முதலமைச்சராக சிங்கள வேட்பாளரையோ அல்லது தமிழ் வேட்பாளரையோ அல்லது முஸ்லிம் வேட்பாளரையோ தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுசெய்ய முடியுமென்றும், எனினும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் முஸ்லிம் ஒருவருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும
அமைச்சர் டலஸ் அழகப்பெரும இங்கு பேசுகையில்;
"ஐ.தே.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், மீண்டும் கிழக்கை வடக்குடன் இணைத்து அதைப் பிரபாகரனின் பிடிக்குள் தாரை வார்த்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதை கிழக்கில் சுதந்திரத்தை விரும்பும், சிரிக்க விரும்பும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது எமது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமையும்.
கிழக்கு மகாணசபைக்கான இந்தத் தேர்தலானது வரலாற்றில் தமிழ் பேசும் மக்களை அரசியல் பங்காளிகளாக்கிக் கொண்ட முதல் சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த எவரும் இதைச் செய்யவில்லை.
அத்துடன், ஐ.தே.க.வில் சரியான தமிழ்த் தலைமைத்துவம் இல்லை. எனவே, தமிழ் மக்கள் ஐ.தே.க.வின் பக்கம் திரும்ப எந்தக் காரணிகளும் இல்லை. அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமினது செயற்பாடுகளும் முழுப் பொய்யென்பதையும் கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றனர்.
பிரபாகரனுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொண்டது ரணில் விக்கிரமசிங்கவும், ரவூப் ஹக்கீமும் மட்டுமே. அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமானும், பெ.சந்திரசேகரனும் சந்தித்திருந்தாலுமே கூட அவர்கள் ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை. எனவே, கிழக்கைப் பாதுகாக்க இந்த எதிரிகளின் கூட்டணியைத் தோற்கடிக்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.
கிழக்கு மாகாணத் தேர்தலின் மூலம் பிரபாகரனின் தமிழீழக் கனவு தகர்த்தெறியப்பட்டுள்ளது. சில மணித்தியாலங்களின் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டச் செயலகங்களிலிருந்து வெளிவரும் தேர்தல் முடிவுகளின் மூலம் பிரபாகரனின் தமிழீழக் கனவு பொய் என்பது புலப்படும். எனவே பிரபாகரன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டுமெனில் பிள்ளையானைப் பின்பற்றவேண்டும்" என்றார்.