கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று 10 ஆம் திகதி சனிக்கிழமை திட்டமிட்டபடி இடம்பெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவிலான பொலிஸாரும், இராணுவத்தினரும்,அதிரடிப்படையினரும் விஷேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்துக் கல்லூரிக்கு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருமலை வீதி, புகையிரதநிலையவீதி, டெலிகொம்வீதி, மகஜனாக் கல்லூரி வீதி ஆகியன பாரிய இரும்புக்கேடர்களால் மூடப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைவிட மேலதிகமாக மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்குச் செல்லும் வாகனங்களும் கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டு பலத்த சோதனையின் பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும் நிறுத்தப்பட்டு சோதனையின் பின்னரே பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவதுடன், மட்டக்களப்பு நகர் கேந்திர நிலையங்கள், முக்கிய சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.