தேர்தல் தினத்திலும் அதன் பின்னரும் மற்றைய சகோதரர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மதித்து நடக்குமாறும் பல்வேறு இனங்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன சௌஜன்யத்தை பேணி நடக்குமாறும் அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களைக் கோரியுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேற்படி கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணம் மூன்று இனத்தவர்களும் வாழும் பிரதேசமாதலால் இஸ்லாத்தின் உயர் விழுமியங்களை ஏனைய இனத்தவர்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் நட்பாகவும், கண்ணியமாகவும் நடந்துகொள்ளுமாறும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களின் இருப்புக்கும், வாழ்வுக்கும் மிக முக்கியமான தேர்தலாக இருப்பதால் சகல முஸ்லிம்களும் தமது வாக்குகளை அளிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"எமது சகோதரர்களின் உயிர், உடைமை, மானம் என்பன பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். இதற்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது.
தேர்தல் தினத்தன்று கோஷ்டி கோஷ்டியாக இருந்து கொண்டு எதிர்த்தரப்பை ஏளனம் செய்தல், ஆதரவாளர்களுக்கு மதுபானம் வழங்குதல், கோஷ்டி மோதல்களில் ஈடுபடுதல், வாக்களிக்கவிடாது தடுத்தல், வெற்றிபெற்றவர்கள் மமதையாக நடத்தல் போன்ற வன்செயல்கள் அனைத்தையும் தவிர்த்து நடந்துகொள்ளுமாறும் ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுக்கின்றது.
களியாட்டங்களில் ஈடுபடுதல், எதிர்த்தரப்பினரைத் துன்புறுத்துதல், பெருமையாக நடந்து கொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.