நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இன்று கிண்ணியாவில் 36077 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது மாகாணத்தின் மொத்த வாக்காளர்களில் 3.7 வீதமாகும்.
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகிறது. கிண்ணியாவில் ஐந்து வேட்பாளர்களுக்கிடையே போட்டி நிலவுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.ஏ.எம். மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி, சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ், டாக்டர் ஏ.எம். லாபிர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கிண்ணியாவில் சுமார் 75 வீதமானோர் வாக்களித்துள்ளனர். அதன்படி இத்தேர்தலில் சுமார் 27 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. கிண்ணியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம். முபாரக் தெரிவித்தார்.
இதேவேளை, சகல வாக்காளர்களும் தமது வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றும் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் மக்கள் மன்றம் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.