யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் கடந்த புதன்கிழமை அத்துமீறிப் பிரவேசித்த படையினர் மாணவர்களைத் தாக்கியதோடு கற்றல் செயற்பாடுகளைக் குழப்பியதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தமது விரிவுரைகளைப் பகிஷ்கரித்தனர்.
கடந்த 07 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதிக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுச் சத்தத்தைத் தொடர்ந்து விடுதியைச் சுற்றிவளைத்த படையினர் விடுதிக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கியதாகவும் மறுநாள் விடுதிக்கு முன்னால் நின்ற பொலிஸார் மாணவர்களைப் பதிவு செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதித்ததாகவும் தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இச் செயற்பாடு மாணவர்களின் சுதந்திரமான கற்றலைப் பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
படையினரின் இந்தச் செயலைக் கண்டித்தே யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் நேற்று விரிவுரைகளைப் பகிஷ்கரித்தனர்.
இதனால், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றுக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எவையும் நடைபெறவில்லை.