மன்னாருக்கு வடக்கே அடம்பன் நகரை நேற்று வெள்ளிக்கிழமை காலை படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அடம்பனை நோக்கி கடந்த சில தினங்களாக படையினர் மேற்கொண்டிருந்த பாரிய முன்நகர்வு முயற்சியை அடுத்தே அடம்பன் நகர் நேற்றுக் காலை படையினர் வசமானதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கடும் சமரையடுத்து அடம்பன் நகருக்குத் தெற்கே அடம்பன் குளத்திற்கும் நிலாச்சேனை வீதிக்குமிடையே சுமார் 2 சதுர கிலோமீற்றர் தூரத்தை தாங்கள் கைப்பற்றியிருந்ததாக படைத்தரப்பு தெரிவித்தது.
அடம்பன் தெற்கை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை இந்தப் பாரிய படைநகர்வில் கவசப்படையணிகள் மற்றும் பீரங்கிப் படையணிகளின் ஆதரவுடன் படையினர் ஈடுபட்டிருந்ததாகவும் இராணுவத்தினர் கூறியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, அடம்பனுக்கு தெற்கேயிருந்து நேற்றுக் காலை மேலும் முன்னேறிச் சென்று அடம்பன் நகரைத் தாங்கள் கைப்பற்றியதாக படையினர் கூறியுள்ளனர்.
இந்தக் கடும் சமரில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்ததாகவும் புலிகள் தரப்பில் 15 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அடம்பன் நகரைக் கைப்பற்றிய படையினர் தற்போது அங்கு தங்கள் நிலைகளைப் பலப் படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.