கிழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சனிக்கிழமை இடம்பெறும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு முன்னொரு போதுமில்லாத அளவுக்கு படையினரும் பொலிஸாரும் சகல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
வடக்கில் மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள், உயிர், உடமை இழப்புகள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கவலைகள், அதிருப்தி நிலைமையை இந்தத் தேர்தலில் பெறும் வெற்றியானது நீக்கிவிடுமென்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் காத்திருப்பதாக தென்படுகிறது.
ஆனால், கிழக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற கட்சியாக விளங்கும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க. நீதி, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் வாக்கு மோசடி அதிகளவில் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் எச்சரித்து வருகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்போதும் ஆயுதங்களுடன் இருப்பதாகவும் அவர்கள் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கக் கூடுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை கைப்பற்றிய பின் மேற்கொள்ளப்படவுள்ள உள்சார் கட்டமைப்பு தொடக்கம் கல்வித்துறை வரையிலான அபிவிருத்தித் திட்டங்களை மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் நிறைவேற்ற முடியுமென அறிவித்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது, இதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியுமென கருதுகிறது. அத்துடன், வடக்கில் அரசு மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் உற்சாகமான அங்கீகாரம் தென்னிலங்கையிலிருந்து கிடைக்குமென அரசு எதிர்பார்ப்பதாகவும் தோன்றுகிறது.
ஆனால், கிழக்கை கைப்பற்ற 1 1/2 வருட காலம் இடம்பெற்ற மோதலில் உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான ஆதரவு தமக்கு கிடைக்குமென எதிரணி கருதுகிறது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள், முஸ்லிம்கள் 80 சதவீதமாகவும் சிங்களவர்கள் 20 சதவீதமாகவும் உள்ள நிலையில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாகாணத்திலுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆயினும், ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த வருட யுத்த செலவினத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், உணவுப் பொருள்விலை அதிகரிப்பாலும் பணவீக்க உயர்வாலும் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தத் தேர்தல் அரசியல் ரீதியில் மிக அதிகளவுக்கு உணர்வுமயப்பட்டதாகக் காணப்படுகிறது.
1,022 தேர்தல் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 5 பொலிஸார் காவல் கடமையிலீடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் 500 மீற்றர் தூரத்திலும் இராணுவம், கடற்படை, விமானப்படையினரென முப்படையினரும் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தேர்தலில் 1,022 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தம் 35 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 10 தேர்தல் தொகுதிகளில் இத்தேர்தல் நடைபெறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகியனவும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகியனவும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகியனவும் அந்தத் தேர்தல் தொகுதிகளாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதனைவிட கூடுதல் வாக்குப் பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனங்களும் கிடைக்கும்.
கல்குடாத் தொகுதியில் 94 ஆயிரத்து 359 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் 1 இலட்சத்து 54 ஆயிரத்து 761 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 81 ஆயிரத்து 830 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அம்பாறைத் தொகுதியில் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 170 பேரும் சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து 69 ஆயிரத்து 57 பேரும் கல்முனைத் தொகுதியிலிருந்து 64 ஆயிரத்து 316 பேரும் பொத்துவில் தொகுதியிலிருந்து 1 இலட்சத்து 33 ஆயிரத்து 765 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அவ்வாறே திருகோணமலைத் தொகுதியில் 91 ஆயிரத்து 598 பேரும் மூதூர் தொகுதியிலிருந்து 84 ஆயிரத்து 175 பேரும் சேருவில தொகுதியிலிருந்து 66,690 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களின் விபரம் வருமாறு: கல்குடா- 91, மட்டக்களப்பு- 137, பட்டிருப்பு- 86, அம்பாறை- 153, சம்மாந்துறை- 77, கல்முனை- 60, பொத்துவில்- 140, சேருவில- 87, திருகோணமலை- 97, மூதூர்- 94.