* பஸ் நிலையம் முன்பாக ஹோட்டலுக்குள் சம்பவம்
அம்பாறை பஸ்நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை 5.40 மணியளவில், அம்பாறை பஸ்நிலையத்திற்கு முன்பாகவும் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு சமீபமாகவுமுள்ள சிற்றி ஹோட்டலினுள் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
அம்பாறை- கல்முனை வீதியிலுள்ள இந்தக் ஹோட்டலினுள் இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்பில் சிலர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் அவசர அவசரமாக அம்பாறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தக் குண்டு வெடிப்பால் ஹோட்டலும் அதனருகிலுள்ள கடைகளும் பலத்த சேதமடைந்ததுடன் அப்பகுதியால் சென்ற சில வாகனங்களும் சேதமடைந்தன.
மாலை நேரமென்பதால் ஹோட்டலினுள் மக்கள் கூட்டம் அதிகமாயிருந்ததாகவும் இதனாலேயே இழப்புக்கள் அதிகமாகயிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலையடுத்து அப் பகுதிக்கு விரைந்துவந்த படையினரும் பொலிஸாரும் படுகாயமடைந்தவர்களை உடனடியாக வாகனங்கள் மூலம் அம்பாறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதுடன், முன்னெச்சரிக்கையாக அப்பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி வீதிப் போக்குவரத்தையும் தடைசெய்தனர்.
கொல்லப்பட்டவர்களில் இருவர் பெண்கள். படுகாயமடைந்தோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாயிருப்பதாகத் தெரிவிக்கப்படு கிறது.
இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு நகரின் பாதுகாப்பு வெகுவாக அதிகரித்திருந்த நிலையிலேயே இந்தக் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் அந்த வீதியூடாக அமைச்சர் பேரியல் அஷ்ரப் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பார்சல் ஒன்றினுள்ளிருந்த நேரக் கணிப்பு குண்டே வெடித்துள்ளதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன.