*பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் ஒல்மேர்ட் அமெரிக்க கோடீஸ்வரரிடம் பணம் பெற்றது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார். இதற்காக பதவி விலக முடியாது என்று மறுத்து விட்டார். அவரது நண்பர்களும், எதிர்க்கட்சியினரும் அவர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒல்மேர்ட் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்கள் மீது பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், அமெரிக்காவில் நியூயோர்க் நகரத்தில் நிதிவழங்குபவரான கோடீஸ்வரர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றார். அந்த கோடீஸ்வரர் `த லோன்ட்ரி மான்' என்று சங்கேத வார்த்தைகளால் பொலிஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க கோடீஸ்வரரிடம் பணம் பெற்றது உண்மை தான் என்றும், அது லஞ்சம் இல்லை நன்கொடை தான் என்றும் அவர் கூறினார். தேர்தல் பிரசாரத்துக்காக தான் நான் வாங்கினேன். 1993 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் ஜெருசலேம் மேயர் தேர்தலில் நான் போட்டியிட்டேன். இதற்கும், 1999 ஆம் ஆண்டு லிகுட் கட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் தேர்தல் செலவுக்காக பணம் பெற்றது உண்மை தான் என்று ஒல்மேர்ட் ஒப்புக்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்துக்காக தான் நான் பணம் பெற்றேன். சுயநலத்துக்காக அதை பயன்படுத்தவில்லை. எனவே நான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பதவி விலகவேண்டும் என்று அவை கோரி உள்ளன. அவரது நண்பர்களும் அவர் பதவி விலகவேண்டும் என்று கோரினார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்க ஒல்மேர்ட் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் பதவி விலகுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.