* திருமலை நகரில் ஆர்வத்துடன் மக்கள் வாக்குப் பதிவு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலையிலேயே நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை முஸ்லிம் பிரிவு, மீராவோடை, பாலமுனை, காங்கேயனோடை ஆகிய பிரதேசங்களில் அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தமையை காணக்கூடியதாகவிருந்தது.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள பல்வேறு வாக்குச்சாவடிகள் ஆயுதபாணிகள் சிலரால் முற்றுகையிடப்பட்டு வாக்காளர்கள் மிரட்டப்பட்டு சட்டவிரோத வாக்களிப்பு இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
இதனைவிட மட்டக்களப்பு மாவட்ட தமிழ்க் கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு சென்ற ஆயுதபாணிகள் வாக்காளர்களை பலாத்காரமாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்துள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்களை முழுமையாக உள்ளடக்கிய பட்டிருப்புத் தொகுதியில் மிக மோசமான தேர்தல் வன்முறைகளும் முறைகேடுகளும் ஆயுதபாணிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
களுதாவளையில் வாக்களிக்கச் சென்றவர்களை வீதிகளில் வைத்து மிரட்டி அவர்களின் வாக்காளர் அட்டைகளை பலாத்காரமாக பறித்தெடுத்த ஆயுதக் குழுவொன்று தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை மிரட்டி வாக்குப் பெட்டிகளில் நிரப்பியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
பட்டிருப்புத் தொகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தேர்தல் வன்முறைகள், மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக தமிழர் ஜனநாயக தேசியக் கூட்டணி பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளது.
வாழைச்சேனை மாவடிவேம்பு விக்னேஸ்வரா கல்லூரி, பட்டிருப்பு கல்குடா வெளி வித்தியாலயம், நாவற்குடா வாக்களிப்பு நிலையம் என்பவற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அதிகாரிகளையும் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் பலாத்காரமாக அச்சுறுத்திவிட்டு வாக்களிப்பில் ஈடுபட்டதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட பட்டிருப்பு தொகுதியில் வெள்ளை வான்களில் சென்ற ஆயுதபாணிகள் இளைஞர், யுவதிகளை பலாத்காரமாக அழைத்துச் சென்று வாக்களிப்பில் ஈடுபடச்செய்ததாகவும் தெரியவருகிறது.
இதனைவிட கிரான் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை, ஓட்டமாவடி முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் ஆளுங்கட்சியில் அதிகாரம் செலுத்தும் அமைச்சரொருவரின் ஆதரவாளர்கள் அடாவடித்தனங்களிலும் மோசடியான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியவருகிறது.
இதேவேளை, நேற்றுக் காலை மட்டக்களப்பு புதூரில் வைத்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) உறுப்பினர்கள் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறே வாழைச்சேனையில் வாக்களிக்கச் சென்ற தமிழர் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாவற்குடாவிலுள்ள வாக்களிப்பு நிலையமொன்றுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும் அங்கிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்)த்தின் உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஆளுங்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளிலேயே பொலிஸாரும் படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் மாத்திரமே நடுநிலைமையாக செயற்பட்டதாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதேவேளை, காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக வாக்களிக்க சென்றதை அவதானித்த பொலிஸார் அவரை வருமாறு சைகைகாட்டி அழைத்தபோதும் அவர் தப்பியோட முயன்றதையடுத்து வானத்தை நோக்கி அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளை தீர்த்தனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் காணப்பட்டபோதும் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியது.
மட்டக்களப்பு மாவட்டமெங்கும் என்றுமில்லாதவாறு பொலிஸார், இராணுவத்தினர், அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வாக்களிப்புக்குச் சென்ற அனைத்து வாக்காளர்களும் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் திருமலை வீதி, மகாஜனக் கல்லூரி வீதி, புகையிரத நிலைய வீதி ஆகியன மூடப்பட்டு மாற்று வீதிகளால் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தலை கண்காணிப்பதற்காக 2 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் மூன்று மாவட்டங்களிலும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் 19 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு, கல்குடா ஆகிய பகுதிகளில் 362 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்றது. மூன்று இலட்சத்து 30 ஆயிரத்து 950 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
மூன்று மாவட்டங்களிலிருந்தும் மொத்தமாக இந்த மாகாண சபைத் தேர்தலில் 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். 37 உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில்....
திருகோணமலை நகரிலும் அதன் சுற்றுப் புறப் பிரதேசங்களிலும் வாக்களிப்பு காலை ஆரம்பமானது. சில இடங்களில் வாக்களிப்பு சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. சில இடங்களில் மந்தமாக இருந்தது. நகரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததைக் காண முடிந்தது. நண்பகல் வரை வாக்களிப்பு வீதம் எவ்வாறு இருந்தது என்ற விபரத்தை திருகோணமலை மாவட்டத் தகவல் பிரிவு வெளியிட்டது. விபரம் வருமாறு; திருமலை பட்டினமும் பிரதேச சூழலும் பிரிவு 42%, கிண்ணியா- 40%, மூதூர்- 50%, தம்பலகமம்- 36%, வெருகல்- 48%, பதவிசிறிபுர- 40%, கோமரங்கடவல- 24.5%, சேருவில- 43%, கந்தளாய்- 38%, குச்சவெளி- 49%, மொரவேவா- 35%.