*பவ்ரல் தெரிவிப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புக்கு முன்னராக 88 வன்முறைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக `பவ்ரல்' அறிவித்துள்ளது.
இதுகுறித்து `பவ்ரல்' நிறைவேற்றுப் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்றிகோ கூறுகையில்;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து, தேர்தல் வாக்களிப்புக்கு முன்னரான காலப்பகுதி வரை 88 ஆதாரபூர்வமான வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மட்டக்களப்பு -39, திகாமடுல்ல - 23, திருகோணமலை -19 என்ற எண்ணிக்கையில் வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கெதிராகவே அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அச்சுறுத்தல், ஆயுதம் காட்டி அச்சுறுத்தல், பிரசாரத்திற்குத் தடை, அலுவலகங்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களும் இவற்றில் அடங்குகின்றன.
குறிப்பாக, இத்தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்க வளங்களை துஷ்பிரயோகம் செய்வது குறித்த முறைப்பாடுகள் கிடைத்தன. இவற்றிற்கு அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.
தேர்தலுடன் தொடர்புடைய மேலும் சில முறைப்பாட்டுச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தபோதும் அச்சம்பவங்கள் ஆதாரமற்றவையாக காணப்பட்டன. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் தேர்தல் வாக்களிப்புக்கு முன்னதான நிலைவரங்களை அவதானித்து தமது அபிப்பிராயங்களை `பவ்ரல்' க்கு வழங்கியிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.