எம்.ஏ.எம்.நிலாம்
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத விதத்தில் வன்முறைகளும், மோசடிகளும் நிறைந்த தேர்தலாகவே நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றதாக அரசியல் அவதானிகளும், தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
1999 ஆம் ஆண்டில் நடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள், மோசடிகளை விட பாரதூரமான சம்பவங்கள் நேற்று இடம்பெற்றிருப்பதாக லங்கா தேர்தல் கண்காணிப்பகமும், நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
நேற்று நண்பகல் 12 மணிவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட வன்முறைகளும், மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. பல வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் விரட்டப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பிள்ளையான் குழுவினர் ஆயுதபாணிகளாக வந்து வாக்காளர்களையும், எதிர்க்கட்சிகளின் வாக்களிப்பு நிலையப் பிரதிநிதிகளையும் அச்சுறுத்தி விரட்டியதாக பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று திருமலை மாவட்டத்தில் மூதூர், கிளிவெட்டி, கிரியாய், கித்துல் வெல போன்ற இடங்களில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும், திருகோணமலை பாணம என்ற இடத்திலிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கமுகாமுக்கு மூன்று வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதேர்தல் கண்காணிப்பகம் விடுத்த அறிக்கையில் நேற்று நண்பகல் 12 மணிவரை 128 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 59 சம்பவங்களும், அம்பாறை மாவட்டத்தில் 39 சம்பவங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 30 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளில் ஐக்கிய தேசியக்கட்சி 80 முறைப்பாடுகளைச் செய்துள்ளது. ஜே.வி.பி.24 முறைப்பாடுகளையும் சுயேச்சைக்குழுக்கள் 17 முறைப்பாடுகளை தெரிவித்து நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆக ஏழு முறைப்பாடுகளை மட்டுமே செய்திருப்பதாக லங்கா தேர்தல் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அரச வாகனங்கள் உட்பட அரச வளங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் தாராளமாக பயன்படுத்தப்படுவதாகவும், அமைச்சர்கள், ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதாரவாளர்களுடன் வந்து வாக்களிப்பு நிலையங்களில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்களிப்பு நிலையச் செயற்பாடுகளை குலைக்கும் விதத்தில் நடந்து கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 50 பேர் வாகனங்களில் வந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படுவதை காணமுடிந்தது.
அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசகர்களுள் ஒருவருடன் கொழும்பிலிருந்து சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் திருமலை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டிய பம்பரவான வித்தியாலயத்தில் வாக்குச் சாவடிக்குள் புகுந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலிங்க சில்வா ஆகியோர் தலைமையில் எட்டு வாகனங்களில் வந்தவர்களை விஷேட அதிரடிப்பிரிவினர் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.