*சுட்டிக்காட்டும் சுயாதீன கண்காணிப்பாளர்கள்
நூற்றுக்கணக்கான வன்முறைச் சம்பவங்களுக்கும் முறைகேடுகளுக்கும் மத்தியில் கிழக்கு மக்கள் தேர்தலில் வாக்களிக்க அதிகளவு ஆர்வம் காட்டவில்லையென சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.
அமைச்சர் படையும் ஆயுதக் குழுக்களின் எல்லை மீறிய அடாவடித்தனமுமே மக்களை வாக்களிப்பதிலிருந்து தூரப்படுத்திவிட்டதாக அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டின.
கிழக்கு மாகாண தேர்தல் களத்திலிருந்து சி.எம்.ஈ.வி. அமைப்பின் தேர்தல் பிரிவு அதிகாரி திசாநாயக்கா கூறுகையில்;
"கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு விகிதம் 45 சதவீதமாக காணப்பட்டுள்ளது.அம்பாறையில் 45 சதவீதமும் திருகோணமலை 50, மட்டக்களப்பு 45 என்ற வீதத்தின் அடிப்படையிலும் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.
மக்களின் சுயாதீன வாக்குப் பதிவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைச்சர்களும் ஆயுதக்குழுக்களும் விளங்கின. இங்கு மக்கள் வாக்களிப்பிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். இது பாரிய மனித உரிமை மீறலாகு"மென்றார்.
இது பற்றி பஃவ்ரலின் கிங்ஸ்லி ரொட்றிகோ கூறுகையில்;
"கிழக்கு மாகாணத்தில் 45 சதவீத வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளது. திருகோணமலையில் 52 சதவீத வாக்களிப்பும் அம்பாறை-48, மட்டக்களப்பு-40 வீதமென்ற அடிப்படையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
அத்துடன் பல வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுபற்றி பல முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன" என்றார்.
இது பற்றி நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கீர்த்தி தென்னக்கோன் கூறுகையில்;
"தேர்தல் வன்முறை, மோசடிச்சம்பவங்களென 174 முறைப்பாடுகள் எமக்கு நேற்று பிற்பகல் 3.30 மணிவரை கிடைத்துள்ளது. இது நேர்மையற்ற தேர்தலை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
திருக்கோவிலில் பதியப்பட்ட வாக்காளர்களை விட அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமாகும். வாக்களிப்பு மோசடிக்கு இதை உதாரணமாகக் கூறலாம்" என்றார்.
லங்கா தேர்தல் கண்காணிப்பக இணைப்பாளர் கெலும் கூறுகையில்;
"மட்டக்களப்பில் பிள்ளையான் ஆயுதக் குழுவினர் நீதியான தேர்தலுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தனர். 38 சதவீத வாக்களிப்பே கிழக்கில் நடைபெற்றுள்ளது.
வாக்களிப்பு நிலையம் சென்ற வாக்காளர்களின் அட்டைகள் பெருவாரியாக ஆயுதப்பிரிவினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. மோசடிச் சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் குறித்து கவனமெடுக்கப்படவில்லை"யெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.