மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்துள்ள் 23 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உடனடியாக அவசர உதவிகள் தேவைப்படுவதாக அப்பகுதியிலுள்ள மனிதநேய உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், சில அகதிகள் தற்போது நோய்கள் மற்றும் போதிய ஊட்டச்சத்தின்மையின் காரணமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் இவர்கள் அனைவருக்கும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அவ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் கூடுதலாக தேவைப்படுவதாகவும் யாழ்.குடாநாட்டுக்கான தரை வழிப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதன் காரணமாக ஆகாய மற்றும் கடல் மார்க்கமாகவே மருத்துவ உதவிகளை கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கில் உணவுப் பொருட்களின் விலைகள் மிக உயர்ந்த விலையில் விற்கப்படுவதன் காரணமாக பொதுமக்கள் அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குவதோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.