*தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டதாக கூறுகிறார் ஹக்கீம்
இலங்கையின் தேர்தல் வரலாற்றிலேயே மிக மோசமான மோசடிகளும் முறைகேடுகளும் கிழக்கில் நேற்று அரங்கேறியிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை மாலை கிழக்குத் தேர்தல் களத்திலிருந்து இத்தகவலைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.
கிழக்கு மாகாணத்தில் சகல அரச வளங்களையும் உபயோகித்து அமைச்சர்களும் அவர்களது தென்னிலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட கைக்கூலிகளும், பிள்ளையானின் ஆயுதக்குழுக்களும் முறைகேடுகளில் ஈடுபட்டன.
கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின், மீதும் அரசாங்கத்தின் சகபாடிகள் மீதும் கொண்டிருந்த கடும் வெறுப்பினை தேர்தலில் வெளிக்காட்டி தக்கபாடம் புகட்டுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
80 சதவீத வாக்களிப்பை நாம் எதிர்பார்த்திருந்தோம். தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடனுள்ளனர் என்ற யதார்த்தத்தை தாங்கமாட்டாத அமைச்சர்கள், மற்றும் ஆயுததாரிகள் கும்பல் கும்பலாக தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் எமக்கு வாக்களித்து விடக் கூடாதென்பதற்காக சகல அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதனால் பெண்களும், வயோதிபர்களும் வாக்களிக்க முடியாது வீடுகளில் முடக்கப்பட்டு அவர்களின் வாக்குகள் ஆயுதமுனையில் திருட்டுத்தனமாக திணிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக மிக மோசமான தேர்தலாக நாம் இதனை நோக்குகிறோம். அரசாங்கம் அரங்கேற்றிய அராஜகங்களை வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்களும், பொது மக்களும் கண்கூடாக அவதானித்தனர். இவ்வாக்களிப்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட மோசடி மற்றும் வன்முறை குறித்து தேர்தல் ஆணையாளருடனும், ரணில் விக்கிரம சிங்கவுடனும் உரையாடினேன். அதாரங்களுடன் இவற்றை முன்வைத்தேன்.
தேர்தல் ஆணையாளர் நியாயமான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு நேர்மையான முன்மொழிவுகளை வெளியிடுவாரென எதிர் பார்த்துள்ளோம். மக்களின் உரிமைகள் இங்கு கபளீகரம் செய்யப்பட்டு, தேர்தல் விதிமுறை சாகடிக்கப்பட்டுள்ளது என்றார்.