*4 பொது மக்கள் காயம்
அம்பாறையில் பக்கிமிட்டியா மற்றும் பன்னலகம பகுதிகளில் நேற்று சனிக் கிழமை காலை இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகள் கடும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
எனினும் இந்தத் தாக்குதல்களில் பன்னலகம பகுதியில் நான்கு பொது மக்கள் காயமடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
பன்னலகம இராணுவ முகாமைச் சுற்றி 20 க்கும் மேற்பட்ட மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்த போதே பத்து வயதுச் சிறுவனொருவன்,பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் தொட்டமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இத் தாக்குதலையடுத்து கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதலை முறியடித்ததாக படையினர் தெரிவித்தனர்.
இதேநேரம் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் கூறுகையில்;
அம்பாறை பக்கிமிட்டியா கோயில்கந்தை பகுதியில் இராணுவ வீதிச் சோதனை நிலையங்கள் மற்றும் காவலரண்கள் மீதும் பன்னலகம இராணுவ முகாம் மற்றும் வீதிச் சோதனை நிலையங்கள் மீதும் கடும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டது.
காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காவலரண்கள் சில அழிக்கப்பட்டுள்ளதுடன், படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.