கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்ற கனிஷ்ட பிரிவு மெய்வல்லுநர் போட்டியில் 10 புதிய மைதான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் , வவுனியா , திருகோணமலை , அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்கள்.
இலங்கை மெய்வல்லுநர் சங்கம் டீசல் அன்ட் மோட்டார் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுகததாச விளையாட்டு அரங்கில் நடாத்திய மேற்படி போட்டியில் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து 11 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்குபற்றி பதக்கங்களைப் பெற்றதையிட்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வர் ஹரிகரன் 18 வயதுப்பிரிவில் 38.38 மீற்றர் தூரம் பரிதிவட்டம் வீசி தங்கப்பதக்கத்தையும் கோபாலன் ஞானதீபன் 20 வயதுப் பிரிவில் தடியூண்டிப் பாய்தல் போட்டியில் 3.20 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி ரி.அனுஜா 20 வயதுப் பிரிவில் 38.94 மீற்றர் தூரம் பரிதிவட்டம் வீசி தங்கப்பதக்கத்தையும் 11.18 மீற்றர் தூரம் குண்டெறிந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.
இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் பிரணவேந்திரா 23 வயதுப்பிரிவில் குண்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும் இதே வயதுப் பிரிவில் மொகமட் ஹரீஸ் 200 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் செல்வி நடீசானி 200 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி குமுதினி 20 வயதுப்பிரிவில் வேகநடைப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் செல்வி ஜயசுந்தர 10,000 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர்.